Wednesday, June 29, 2011

தலையில் அடித்து‍ கொள்ள ஒரு‍ கதை

கட்டம் போட்ட லுங்கியும், தன் நிறத்துக்கு‍ சற்றும் பொருத்தமேயில்லாத ஒரு‍ டி-ஷர்ட்டும் போட்டுக் கொண்டு‍ மிதிவண்டியில் தனது‍ இரண்டரை வயது‍ பெண் குழந்தையை முன்பக்க கூடையில் வைத்து‍ கொண்டு‍, ஆயிரம் தொழிலாளர்களுக்கு‍ மேல் வேலை பார்க்கும் அந்த கம்பெனியின் முன்பு நின்றான் அவன்.  பதினைந்து‍ நாள் தாடி‍ வேறு.  சோகமாம்.

வெளியே நின்று‍ கொண்டிருநத் செக்யூரிட்டிகளிட்ம் மிகுந்த சோகத்துடன் தன் குழந்தையை காட்டி‍ காட்டி‍ ஏதோ சொல்ல அடுத்த சில மணித் துளிகளில் அத்தொழிற்சர்லை ஏக பரபரப்பு அடைகிறது. டைம் ஆபிஸில் ஓர் ஓரமாக அந்த நபரை உட்கார வைத்து‍ விட்டு‍ உள்ளே செல்கிறார் ஒரு‍ அலுவலர்.

சிறிது‍ நேரம் கழித்து‍ வரும் அவர் அந்த நபரிடம் ஏதோ கூறி ஆமோதிக்கிறார்.  கையெடுத்து‍ கும்பிட்டுவிட்டு‍ அங்கிருந்து‍  விடை பெற்றுச் செல்லும் அந்நபரை பாவமாக பார்த்தபடி‍ எல்லோரும் அனுப்பி வைக்கின்றனர்.  அதற்குள் விஷயத்தை கேட்டு‍ பதறியபடி‍ வந்த (அந்த ஷிப்டில் பணியாற்றும்) ஒரு‍ சில தொழிலாளர்களும் அந்நபருக்கு‍ ஆறுதல் கூறி அனுப்புகினற்னர்.

அளந்தது‍ போதும் விஷயத்தை சொல் என்கிறீர்களா?  அது‍ ரொம்பவும் சின்ன விஷயந்தான்.  வந்த நபரின் மனைவி இங்கு‍ வேலை பார்க்கிறாள்.  கம்பெனியில் காண்டிராக்ட் முறையில் வேலை.  நேற்று‍ வேலைக்கு‍ வந்தவள் இன்று‍ மாலை வரை வீட்டிற்கு‍ செல்லவில்லை. 

தேடிப்பார்த்தாகி வி்ட்டது.  எங்கும காணவில்லை.  இந்த கணவனுக்கோ சின்ன சந்தேகம்.  ஒரு‍ சூபர்வைசரின் பேரைச் சொல்லி அவரும் இவளும் ஓடிப் போயிருக்கலாம் என்று‍ கொளுத்தி்ப் போடுகிறான்.   உள்ளே சென்று‍ பார்த்தால் மேற்படி‍ நபர் மூன்று‍ நாட்களாக வரவில்லை.  வயதும் இந்தப் பெண்ணை விடக் குறைவு.

எல்லோரும் தலையிலே அடித்துக் கொள்கிறனர். அந்தப் பெண் பணிபுரியும் துறை சார்ந்த ஒரு‍ சிலர் அந்தக் கணவனுக்கு‍ ஆறுதல் கூறுகின்றனர்.  அவனோ தன்னைப் பற்றி கவலையில்லை என்றும் இந்தக் குழந்தை இரு‍ நாட்களாக தாய் முகம் காணாது‍ அம்மா அம்மா என அழுது‍ புலம்புவதாகவும் அதைக் கண்டு‍ என்னால் தாங்க முடியவில்லை என்றும் கூறி எல்லோரிடமும் இரக்கத்தை வரவழைக்கிறான்.

இவளெல்லாம் ஒரு‍ தாயா?  

தன் குழந்தையை எண்ணிப் பார்க்க வேண்டாவா? 

அவன் கூப்பிட்டால் இவளுக்கு‍ எங்கே போனது‍ அறிவு?

அவன் வயதெனன், இவள் வயதென்ன?

தீர்ப்பு சொன்ன நாட்டு‍ ஆமைகள் பலவாறு‍ சலித்துக் கொண்டன.

அன்று‍ வெள்ளிக்கிழமை.  மறுநாள் அரசு‍ விடுமுறை.  பின்பு ஞாயிறு‍.  திங்களன்று‍ கம்பெனிக்கு‍ வேலைக்கு‍  வருகிறார்கள்.   அந்தப் பெண்ணும் வருகிறாள்.  தளர்ந்து‍ போன நடை. அழுது‍ அழுது‍ சிவந்த கண்கள்.  தலையைக் குனிந்தவாறே வந்து‍ தன் இருக்கையில் அமர்கிறாள்.  

ஒவ்வொருவறாக அவளை  சூ‍ழ்கிறார்கள்.  கோபமாக கேள்வி தொடு‍க்க ஆயத்தமாகும சமயம் அவளே ஆரம்பிக்கிறாள்.  எல்லாவற்றையும் சொல்கிறாள்‌.  இப்பவும் எல்லோரும் தலையில் அடித்து‍ கொள்கிறார்கள்.

விஷயம் இதுதான்.  சம்பந்தப்பட்ட தாடிக்கார பார்ட்டி‍ தண்ணிப் பாரட்டி.  வேலையிலும் இல்லை.  அவ்வப்போது‍ இந்தப் பெண் கொடுக்கும் பணம் போதவில்லை என்று‍ வீ்ட்டிலேயே திருடி‍ நீராகாரம் அடித்திருக்கிறார்.  எவ்வளவோ சொல்லியும் தன் கணவன்  திருந்தாது‍ கண்டு-‍  கோபித்துக்  கொண்டு‍ தன் அம்மா வீட்டிற்கு‍ சென்றிருக்கிறார் இந்தப் பெண்.  அங்கேயே இரண்டு‍ நாட்கள் சொல்லாமல் தங்கி விட்டார். 

கு‍ழந்தையை வைத்துக் கொண்டு‍ தன் கணவன் நன்றாக படட்டும் என்று‍ விட்டுவிட்டாள் இந்தப் பெண்.  ஆனால் எந்த பாரில் எந்த கோணத்தில் படுத்தபடி‍ நம் பார்ட்டி‍ யோசித்தது‍ என்று‍ தெரியவில்லை. அழகாக திரைக்கதை, வசனம் எழுதி தன் குழந்தையையும் கேரக்ட்ர் ஆர்டிஸ்டாக போட்டு‍ ஒரு‍ படத்தை கம்பெனியில் ஓட்டி‍ சென்று‍ விட்டது.

இக்கதையை கேட்டவர்கள் எல்லோரும் இப்பொழுது‍ அவனை அர்ச்சிக்க ஆரம்பிக்க ஒரு‍வர் மட்டும் சற்று‍ யோசித்து‍ விட்டு‍ கேட்கிறார். ஏன் குறிப்பாக  அந்த சூபர்வைசரை அந்த தாடி‍ சொல்லியது.  அவருக்கும், தாடிக்கும், இந்தப் பெண்ணுக்கும் என்ன தொடர்பு?

ஒருநாள் நல்ல மூடில் இருக்கும் (கனாக்காலம்?) போது‍ சினிமாவிற்கு‍ சென்றிருக்கிறார்கள்.   இந்த சூபர்வைசரும் அப்படத்திற்கு‍ வந்திருக்கிறார்.  தன்னுடன் பணியாற்றுகிறாரே என்று‍ இவரை தன் கணவனுக்கு‍ இந்தப் பெண் அறிமுகம் செய்து‍ வைக்க நம் தாடியோ அன்றே திரைக்கதை - வசனத்தை ரெடி‍ செய்து‍ விட்டு‍ அரங்கேற்றத்திற்கு‍ நாள் பார்த்துக் கொண்டிருந்திரு‍க்கிறது.

அந்தப் பெண் இந்த சமயம் பார்த்து‍ எஸ்கேப்பாக அழகாக அண்ணன் அடித்து‍ ஆடிவி்ட்டார்.   எல்லாம் சரி அந்த சூபர்வைஸர் மூன்று‍ நாடகள் வரவி்ல்லை என்று‍ சொன்னாயே அது‍ என்ன கதை என்கிறீர்களா?  அம்மாவுக்கு‍ உடல்நிலை சரியில்லை என்று‍ வெளியூருக்கு‍ சென்று‍ விட்டார்.  

அந்த சூபர்வைஸரும் விஷயத்தை கேள்விபட்டு‍ தன் தலையில் அடித்துக் கொண்டது‍ தனிக்கதை. எல்லாமுமே தாடிக்கு‍ சாதகமாக அமைந்தது‍ ஆச்சர்யம்தான்.




Thursday, May 26, 2011

ஹவுஸ் ஃபுல்

என்னை நேரிடையாக பாதிக்கின்ற விஷயம் என்பதால் கொஞ்சம் சீரியஸாக முயன்றிருக்கிறேன்.  வழக்கம் போல என் மழலை எழுத்துகள் கொஞ்சம் உங்களை இம்சி்த்தாலும் என் உளக்கிடக்கையை (?) தாங்கள் புரிந்து‍ கொள்வீர்கள் என நம்புகிறேன்.

சென்ற அதிமுக ஆட்சியில் லாட்டரி ஒழிப்பு என்பது‍ காலாகாலத்திற்கும் அவர்களுக்கு‍ ஒரு‍ பெயரை ஏற்படுத்தியது‍ போல, திமுக ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சிற்றுந்து‍ திட்டமு‍ம், உழவர் சந்தையும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த முறை சமச்சீர்கல்வி திமுகவிற்கு‍ ஒரு‍ நல்ல பெயரை பெற்று‍ தநத்து‍ என்னவோ நிஜம்.  இவர்களுக்கு‍ பதவி பறி போக 2G, குடும்ப ஆதிக்கம், விலைவாசி என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் சமச்சீர்கல்விதிட்டம் மக்களிடம் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது‍ என்பதை மறுக்க முடியாது.

2010-11ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புக்கு‍ சமச்சீர்கல்விதிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.  செயல்வழிக் கற்றல் மூலம் கல்வி பயின்ற முதல் தலைமுறை மாணவர்கள் மிகச்சரியாக ஆறாம் வகுப்புக்கு‍ வரவும், இந்த திட்டம் அதே வருடத்தில் நடைமுறைக்கு‍ வரவும் மிகச் சரியாக அமைந்தது.

அரசு‍ ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு‍ சிலரிடம் பேசிய போது‍ அவர்கள் சொன்ன விஷயம் சுவாரஸ்யமானது.  எங்கள் மாணாக்கர்கள் செயல்வழிக் கற்றல் மூலம் கல்வி பயின்று‍ வருவதால் இன்னும் ஐந்து‍ வருடங்கள் கழித்து‍ பத்தாம் வகுப்பு மற்றும் பனிரண்டாம் வகுப்பு ரிசல்டை பாருங்கள், அசந்து‍ விடுவீர்கள்.   3 மற்றும் 4 வகுப்பு மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு‍ பதில் சொல்ல நாங்கள் திணற வேண்டியுள்ளது.  

இனி அடுத்து‍ சமச்சீர்கல்வியும் பயிலும்போது‍ எந்த மெட்ரிக் மாணவனுக்கும் சளைக்காமல் எங்கள் பையன்களும் தங்கள் திறமையை நிரூபிப்பார்கள்.

என் நண்பர் ஒருவரின் மகன் ஆறாம் வகுப்பு படிக்கிறான்.  அவன் கிராமத்தில் செ.வ.க மூலம் 1 லிருந்து‍ 5 வரை படித்தவன்.  பிறகு‍ இங்கு‍ வந்து‍ சமச்சீர்கல்வியில் ஆறாம் வகுப்பு முடித்து‍ ஏழாவதிற்கு‍ தயாராகி விட்டான்.

வாராவாரம் இண்டெர்நெட் மையத்திற்கு‍ தன் தகப்பனாரை அழைத்து‍ செல்வான்.  கேட்டால் பிராக்டிகல் என்று‍ பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி  பயமுறுத்துவான். 

அடியேன் படிக்கிற போது‍ பிளஸ் டூ வரை பிராக்டிகல் என்பதிற்கு‍ என்ன அர்த்தம் என்பதே எனக்கு‍ தெரியாது‍ என்பதை இங்கே கூச்சத்துடன் பதிவு செய்கிறேன். 

தண்ணீருக்கு‍ள் காய்களை (vegetables) போட்டால் எந்தெந்த காய்கறிகள் மூழ்கும்,  எவையெவை மிதக்கும்.

நாட்டுப்புரப்பாட்டு‍ நெட்டிலிருந்து‍ பிரிண்ட் அவுட் எடுக்கனும்.  எப்படி‍ எடு்க்கிறது?  (புரமா, புறமா இடையில் ஒரு‍ சர்ச்சை வந்தது‍ நினைவிருக்கலாம்)

பள்ளிக்கூடத்திலிருந்து‍ நம்ம வீடு‍ எத்தனை தப்படி‍ இருக்கும்.

வீட்டில் உள்ள அறைகளோட நீள அகலம் என்ன?  எத்தனை அடி?

எந்த பொருள் வாங்கினாலும் manufacturing date மற்றும் expiry date ஏன் பார்க்கனும்?

சிறுவர்களை சகட்டு‍ மேனிக்கு‍ கேள்வி கேட்க தூண்டுவதுதான் சமச்சீர்கல்வி.    ஆறாம் வகுப்பு பாடப்புத்தகம் கிடைத்தால் படித்து‍ பாருங்கள்.  அட்டகாசமான எழுத்து‍ நடையில் விறுவிறுப்பான ஒரு‍ நாவலைப் படிப்பது‍ போல இருக்கும். 

மனசாட்சியுள்ள எந்தவொரு‍ அரசுப்பள்ளி ஆசிரியரையும் கேட்டுப் பாருங்கள். உண்மை தெரிய வரும்.  வேலைப்பளு‍ அவர்களுக்கு‍ கூடியுள்ளது‍ என்னவோ உண்மைதான்,  ஆனால் அதனால் விளையும் நன்மை அளப்பரியது.

பங்களாவில் இருப்பவனும், குப்பத்தில் இருப்பவனும் ஒரே சப்ஜெக்டை படிப்பதா? கெளரவம் என்னாவது?   போட்டி‍ அதிகரிக்க, அதிகரிக்க மேட்டுக்குடி‍ மக்களுக்கு‍ கொஞ்சம் தலைவலிதான்.  எனவே கச்சிதமாக காயை நகர்த்தி முளையிலேயே நடுத்தர மற்றும் குப்பத்து‍ மூளையை மழுங்கடிக்க முயன்று‍ வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.

ஆறாம் வகுப்பு மாணவனுக்கு‍ நான்காம் வகுப்பு பாடம் எதற்கு‍ என்று‍ மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் கேட்கிறார்கள்.  சரி! ஏழாம் வகுப்பு மாணவனுக்கு‍ கரப்பானின் இரத்த ஓட்ட மண்டலம் எதற்கு?  கேட்க தெரியாமல் முழிப்பது‍‍ ஏழாம் வகுப்பு மெட்ரிக் மாணவனேதான்.

தரம் இல்லையெனில் தரத்தை மேம்படுத்தட்டும்.  சர்ச்சைக்குரிய பாடங்களை நடத்த வேண்டாம் என அறிவிப்பு செய்யட்டும்.  ஒட்டு‍ மொத்த வீட்டையே கொளுத்துவது‍ என்ன நியாயம்?

சமச்சீர்கல்வியை படித்தா அப்துல் கலாம் ராக்கெட் விட்டார்.  இது‍ ஒரு‍ மெட்ரிக் பிரகஸ்பதியின் கேள்வி.  பி.எட்டை ஒழுங்காக படித்திருந்தால் இந்த மாதிரியான அச்சுப்பிச்சான கேள்விகளை அவரால் கேட்க முடியாது.

ஆம் குழந்தைகளில் பல ரகம் உண்டு.  மீத்திறன் பெற்ற குழந்தை (gifted child), சராசரி குழந்தை, கற்றல் குறைபாடு‍ கொண்டது,  மெதுவாக கற்கும் குழந்தை என பலப்பல.  கவனிக்கவும்: மக்கு‍ குழந்தை என்று‍ இதுவரை ஒரு‍ குழந்தை கூட இந்த பூவுலகில் பிறக்கவில்லை.

இதில் நமது‍ முன்னாள் குடியரசுத் தலைவர் மீத்திறன் பெற்ற குழந்தை என்ற கேட்டகரியில் வருவது‍ உங்களுக்கு‍ இப்போது‍ புரியும்.    ஆனால் சமச்சீர்கல்வி என்பது‍ இராமேஸ்வரம் மட்டுமல்ல தமிழகத்தின் எல்லா  மாவட்டங்களிலும், எல்லா தெருக்களிலும் ஒரு‍ அப்துல் கலாம் வர வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டதே.

இருக்கின்ற கவிஞர்கள் இம்சைகள் போதும்
என்னை கவிஞன் ஆக்காதே

வைரமுத்து‍வின் ஒரு‍ திரைப்படபபர்டல் வரியிது.  

இருக்கின்ற புத்திசாலிகளின் இம்சைகள் போதும்
இன்னும் புத்திசாலிகள் வேண்டாம் -  என்று‍ ஹவுஸ் ஃபுல் பலகையை ஒவ்வொரு‍ பள்ளியிலும் மாட்டி‍ வைக்க முடிவெடுத்திருப்பது‍ மெக்கல்லாவை வேண்டுமானால் திருப்தி படுத்தலாம்.  இளைய தலைமுறையை............?

2G என ஒன்று‍ இல்லாமல் இருந்து‍, இவர்கள் வருந்தி வருந்தி  என்னதான் களப்பணி ஆற்றியிருந்தாலும் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருப்பார்களா என்பது‍ இங்கு‍ கவனிக்க வேண்டிய கேள்வி.  பெருவாரியான வெற்றியை வலுக்கட்டாயமாக மக்கள் இவர்கள் மீது‍ சுமத்தியிருக்கிறார்கள் என்பதே உண்மை.  

அதைப்புரிந்து‍ கொள்ளாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று‍ முடிவெடுப்பது‍ம் அதுவும் எண்ணிக்கையில் ஆயிரத்துக்குள் அடங்கிப் போகும் மெட்ரிக் மாபியாக்களுக்கு‍ ஆதரவு தருவதும் ப்ச் என்னவோ போங்க.

அவிய்ங்களும், (சென்ற ஆட்சியாளர்கள்)  இவிய்ங்களும் ஏதோ ஒரு‍ புள்ளியில் இணைந்து‍ விடுவதாகத்தான் எனக்கு‍ப் படுகிறது‍.  உங்களுக்கு.....?

Monday, May 16, 2011

படித்ததில் பிடித்தது‍

1971ஆம் ஆண்டு...................

பொதுத்தேர்தல் முடிந்து‍ முடிவுகள் வந்து‍ விட்டன.

தமிழகம் காமராஜை இரண்டாவது‍ முறையும் ஏமாற்றி விட்டது.

இந்திய அரசியலில் இனி இந்திரா காந்தியா?  காமராசரா?   எனற் கேள்விக்கு‍ இந்திராவே என்ற பதில் கிடைத்தது.

காமராஜை தோற்கடிக்க இந்திராவுக்கு‍ கருணாநிதி துணை நின்றார்.

ஸ்தாபன காங்கிரஸ், சுதந்திரா கட்சி, ஜனசங்கம்  மூன்றும் கூட்டணி அமைத்துத்‌ தேர்தலில் போட்டியிட்டன.

1967இல் கழகத்துடன் நின்ற ராஜாஜி 1971ல் காமராசரோடு‍ கை கோர்த்து‍ நின்றார்.

நீண்டகால அரசியல் பகைவர்களான காமராசரும் ராஜாஜியும் ஒரே மேடையில் தோன்றி முழக்கமிட்ட மெரினா கடற்கரைக் கூட்டத்தில் சென்னை நகரமே திரண்டு‍ நின்றது.

எதற்கும் மயங்காத காமராசரே அன்று‍ கூடிய கூட்டத்தில் மயங்கினார்.

இரகசிய போலீஸ் காமராசர் கோட்டையில் அமர்வது‍ நிச்சயம் என்று‍ கருணாநிதிக்குக் குறிப்பு அனுப்பியது.

நாளை என்னைக் கோட்டையில் சந்தியுங்கள் - என நிருபர்களிடம் காமராஜ் உறுதியாக உரைத்தார்.

ஆனால் இந்தியா முழுவதும் இந்திரா காங்கிரஸ் பெரு‍ வெற்றி பெற்றது.

தோல்வியை ஜீரணிக்க முடியாத வாஜ்பாய் போனற் பெரிய தலைவர்கள் அனைவரும் இந்திரா காங்கிரஸ் வெற்றிக்கு‍ ரஷ்ய மையே காரணம் எனற்னர்.

ஆனால் காமராஜோ நாம் தோற்றது‍ உண்மை.  உண்மையை ஏற்றுக் கொள்வதுதான் நேர்மையான அரசியல்.  ரஷ்ய மை அது‍ இதுன்னு‍ சமாதானஞ்‍ சொல்றது‍ சரியில்லேன்னேன்.  இந்த அரசியல் ஜனங்களிடம் எடுபடாதுன்னேன் என சமாதானம் கூறினார்.

1967ல் மக்கள் தீர்ப்பை எப்படி‍ மனங்கோணாமல் அவர் ஏற்றுக் கொண்டாரோ, அதே பெருந்தன்மையுடன் 1971ல் தனக்கு‍ எதிராக அளித்த தீர்ப்பையும் தலை வணங்கி ஏற்றுக் கொண்டார்.

 - தமிழருவி மணியன்
    அடிமனத்தின் சுவடுகள் நூலிலிருந்து‍.

அஞ்சறைப் பெட்டி‍

சென்ற வருடம் IAS தேர்வு முடிவுகளில் முதலாவதாக வந்து‍ கலக்கியவர் ஒரு‍ கஷ்மீர் இளைஞர்.  இப்போது‍ தமிழகத்தை சேர்ந்த ஒரு‍ இளைஞி முதல் மார்க் எடுத்து‍ தமிழகத்திற்கு‍ பெருமை சேர்த்திருக்கிறார்.  முதல் பத்து‍ இடங்களுக்கு‍ள் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு‍ பேர் தேறியிரு‍ப்பதும், மொத்த தேர்ச்‌சியில் கிட்டத்தட்ட 15% பேர் தமிழகத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதும் நமக்கெலாம் ஒருவகையில் பெருமைதான். 

இன்னும் பதினைந்து‍, இருபது‍ வருடங்களுக்குப் பிறகு‍ இந்தியாவின் மிக உயரிய பதவிகளிலெலாம் நம்மாட்களின் கொடிதான் பறக்கும்.  இன்று‍ கேரள சேட்டன்களின் ஆதிக்கம் எப்படி‍ டில்லியில் பறக்கிறதோ அதே போன்று‍ ஒரு‍ நிலை வருங்காலத்தில் வரும் என்பது‍ சர்வ நிச்சயம்.  வருடா வருடம் நம் மாநிலத்திலிருந்து‍ தேர்வு பெறுபவர்களின் சதவீதம் அதிகமாகிக் கொண்டு‍ செல்வதே இதற்கு‍ சாட்சி.

ஆனால் அப்போது‍  அரசியலில் இருக்கப் போகும் நம் அரசியல் தலைவர்கள் இந்த IAS-களை பயன்படுத்தி என்னென்ன நலத்திட்டங்களை வெகு‍ சுளுவாக தமிழகத்திற்கு‍ கொண்டு‍ வரப்போகிறார்கள்  என்பது‍ நம் தலையெழுத்தை வைத்தே உள்ளது.

***********************

மாம்பழத்தின் ஜாதகக் கோளாறு‍ இப்போது‍ சாத்துக்குடியையும் பிடித்து‍ கொண்டு‍ விட்டது.  படிகாரக்கல்லைக் கொண்டு‍ பழுக்க வைப்பதால் மனிதனுக்கு‍ ஏற்படும் கோளாறு‍ கொஞ்ச நஞ்சமல்ல.   அதை தெரிந்து‍ கொண்டும் திருந்தாத ஜென்மங்கள் கொள்ளை இலாபம் அடிப்பதற்காக இப்போது‍ சாத்துக்குடிப் பக்கமும் தங்கள் வேலையை துவக்கியிருப்பது‍ திமிர்த்தனத்தின் உச்சம். 

கோவையில் சென்ற வாரம் 4 டன் அளவிலான சாத்துக்குடிகள் பழ மண்டிகளில் இருந்து‍ கைப்பற்றப்பட்டு‍ மாவட்ட சுகாதார ஆய்வாளர்களால் அழிக்கப்பட்டுள்ளன.  காரணம் படிகாரம் கொண்டு‍ அவற்றை பழுக்க வைத்தது‍தான்.

அதிரடி‍ நடவடிக்கைக்கு‍ தேர்தல் ஆணையத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.  எந்த மேலிட தலையீடும் இல்லாமல் நடந்த இந்த அதிரடி‍ நடவடிக்கை புதிய ஆட்சியிலும் தொடர வேண்டும்.

*******************

நண்பரின் வீட்டிற்கு‍ நல்ல வெயில் நேரத்தில் சென்றிருந்தேன்.  என்னைப் பார்த்ததும் வரவேற்றவர் சமையலறையை நோக்கி "இன்னொரு‍ டம்ளர் கொண்டு‍ வா" என குரல் கொடுத்தார்.

"டீ, காபியெல்லாம் வேண்டாம்.  வெயில்ல ஒண்ணும் சமாளிக்க முடியாது."
என சமாளித்தேன்.  சூடாக ஏதேனும் குடித்து‍ தொலைத்தால் அடுத்த அரை மணி நேரத்திற்கு‍ பொங்கி வழியும் (குறிப்பாக கழுத்துப் பகுதி) இந்த வியர்வை சனியனுக்கு‍ பயந்து‍ பல விஷயங்களை ஒதுக்க வேண்டியுளள்து. 

அவரின் மனைவி சிறிது‍ நேரத்தில் ஒரு‍ கண்ணாடி‍ தம்ளரில் கரு‍ஞ்சிவப்பில் ஏதோ ஒரு‍ திரவத்தைக் கொண்டு‍ வந்தார்.  கூல்டிரிங்கா !   அடக் கடவுளே இதுவும் நமக்கு‍ ஒத்துக் கொள்ளாத  விஷயமாயிற்றே என்றெண்ணியவாறே வாங்கினேன்.

ஆனால் ஒரு‍ வாய் வைத்ததும் வியப்படைந்தேன். அது‍ குளிர்பானம் அல்ல.  குளிர்ந்த சாறு. ஆனால் தெரிந்த ஏதோ ஒன்றிலிருந்துதான் இந்த சாறை தயாரித்திருந்தார்கள் என்பது‍ புரிந்தது.  முடிந்த மட்டும் என் சமையல் அறிவைக் கொண்டு‍ (!) யோசி்த்தும் ஒன்றும் புலப்படாது‍ போகவே  என்னவென விசாரித்தேன்.  பீட்ரூட் + வெள்ளை பூசணி கலந்த சாறாம். இரண்டையும் மிக்ஸியில் அடித்து‍ சாறு‍ பிழிந்து, வெல்லம் மற்றும் ஏலக்காயை தட்டி‍ போட்டு‍ வடிகட்டி‍ சிறிது‍ நேரம் பிரிட்ஜில் வைத்து‍ கொடுத்திருக்கிறார்கள். ருசி......... அடடா  செய்து‍ பார்த்து விட்டு‍ சொல்லுங்கள் அல்லது‍ அனுபவியுங்கள்.  சத்துக்கு‍ சத்து, பானத்திற்கு‍ பானம்.

***************

Wednesday, May 11, 2011

காந்தி வந்த ஊர்

விருதுநகருக்கு‍ ஒரு‍ வேலையாக சென்றிருந்த என் நண்பர் ஒருவர் "பார்த்தேன், பார்த்தேன்" என்றபடி‍ வந்தார்.  கண்டேன் சீதையைப் போலவும், யுரேகா போலவும் இவர் பார்த்தேன், பார்த்தேன் எனக்‍ கூறியதும் என்ன ஏது‍ என்று‍ விசாரித்தேன்.

சில மாதங்களுக்கு‍ முன்பு கோவையில் நடந்த  ஒரு‍ புத்தகக்காட்சியின் போது‍, பத்து‍ நாட்களுக்கு‍ தினமும் மாலையில் ஒருவர் பேசுவதாக ஏற்பாடு.  ஒரு மாலைப் பொழுதில் நான் அங்கு காலடி‍‍ எடுத்து‍ வைத்த வேளையில்‍, என் அதிர்ஷ்டம் அன்று‍ பேசியவர்  எஸ்.ரா.

எழுத்தில் பட்டாசு‍ கிளப்புபவர்கள், பேச்சில் சொதப்பி விடுவார்களோ என்ற எண்ணத்தில் அரங்கில் அமர்ந்த என்னையும், என்னைப் போல மற்றவர்களையும் தன் அற்புத உரையால் வேறு‍ தளத்‌திற்கு‍ அழைத்துச் சென்றார்.  அவரின் பேச்சும், அவர்தம் எழுத்தைப் போலவே ஒரு‍ காந்தத்தை தன்னுள் வைத்தவாறு‍ பிறப்பது‍ நம்முடைய பேறுதான்.

தன் பேச்சினூடே அவர் சொன்ன ஒரு‍ விஷயத்தைத்தான் மேற்கண்ட என் நண்பரிடம் கூறியிருந்தேன்.  அதை இவ்வளவு நாட்களாக மனதில் வைத்துக் கொண்டு‍ இப்போது‍ பார்த்தேன், பார்த்தேன் என கூறுகிறார்.

விருதுநகர் பக்கம் சென்றால் அவசியம் ரயிலடிக்கு‍ சென்று‍ பாருங்கள்.  அங்கு‍ ஒரு‍ கல்வெட்டு‍ இருக்கும்.  கல்வெட்டில் இருக்கும் நாளன்றுதான் அந்த ஊருக்கு‍ தேசப்பிதா மகாத்மா காந்தி வந்தாராம்.  காந்தி தங்கள் ஊருக்கு‍ வந்ததை போற்றும் வகையில் அன்றைய மக்கள் எந்தளவுக்கு‍ சிறப்பித்து‍ கல்வெட்டு‍ நிறுவினார்களோ அதே போல மற்றொருவரும்  நீண்ட நாட்களுக்குப் பிறகு‍ அன்றைய தேதியில் வந்ததை நன்றியோடு‍ அந்த கல்வெட்டில் பதி்ந்திருக்கிறார்கள்.

ஆம் வந்தவர் வருண பகவான்.  காந்தி அன்றைய தினம் விருதுப்பட்டி‍ வரும்போது‍ தன்னுடன் மழையையும் அழைத்து‍ வந்திருக்கிறார்!  இன்றும் கல்வெட்டில் இந்த விஷயம் இருப்பதைத்தான் நண்பர் பார்த்துவிட்டு‍ என்னிடம் பரவசமாக கூறினார்.

அற்புதமான தலைவர்,  வெகுளியான மக்கள்,  பொய்க்காத வானம்  இந்த மூன்றுக்கும் ஒரு‍ தொடர்பு இருப்பதாக எனக்குப்படுகிறது.  உங்களுக்கு?

Tuesday, May 10, 2011

அஞ்சறைப் பெட்டி‍

மனைவியின் சொந்த கிராமத்திலிருந்து‍ போன்.  தன் அம்மாவுடன் வழக்கமான உரையாடல்களுக்குப்‍ பிறகு‍, என் பாரியாள் அதி்ர்ச்சி கலந்த குரலில், அப்படியா!, எப்போ? எப்படி?  அடக் கடவுளே! என்று‍ உச் கொட்ட என்ன, ஏது‍ வென்று‍ நான் பதற்றமானேன்.  போனை வைத்து‍ விட்டு‍ விஷயத்தை சொல்ல சொல்ல நானும் மேற்கண்ட அதி்ர்ச்சி சொற்களை உதிர்க்க ஆரம்பித்தேன்.  விஷயம் இதுதான்.

தன் அம்மா வீட்டுக்கு‍ பக்கத்து‍ வீட்டில் ஒரு‍ கூட்டுக் குடும்பம் வசிக்கிறது.  அக்குடும்பத்தின் இரண்டாவது‍ மருமகள் நாயால் இறந்து‍ விட்டார்.  அவருக்கு‍ பத்து‍ மற்றும் எட்டு‍ வயதில் இரு‍ பெண் குழந்தைகள்.  கணவர் விவசாயி.  கவனிக்க நாய் கடியால் அல்ல.  நாயால். 

குழம்ப வேண்டாம்.  அந்த பெண்ணின் கணவரை சில மாதங்களுக்கு‍ முன்பு ஒரு‍ நாய் கடித்திருக்கிறது.  இவரும் ஏதோ நாட்டு‍ மருந்தை  உட்கொண்டு‍ விட்டு, அதீத நம்பிக்கையில் தனக்கு‍ ஏதும் நேராது‍ என்று‍ எண்ணி அசட்டையாக விட்டுவிட்டார்.  சில நாட்களில் அந்த நாயும் இறந்து‍ விட்டதாம்.  அப்பவும் எந்தவித மேல்சிகிச்சையும் எடுக்காமல் இருந்திருக்கிறார். 

ஆனால் விதி வேறு‍ வகையில் விளையாடி‍யிருக்கிறது.  ஆமாம் இவரின் உயிரணு‍ மூலம் அவர் மனைவிக்கு‍ அந்த கிருமி சென்று‍ அவரின் உயிரை எடுத்துவிட்டது.  உயிர் போகும் நாள் வரை எந்தவித அறிகுறியும் இல்லையாம்.  இறுதி நாளன்று‍ நாயைப் போலவே பிராண்டுவது, இரைப்பது, வாயில் நீர் வடிவது‍ என பல சிரமத்தை அந்த பெண் அனுபவித்து‍ விட்டு, 108லேயே உயிரை வி்ட்டுவிட்டாராம்.

அடுத்த லீவுக்கு‍ உங்க ஊருக்கு‍ வரணும். அப்படியே ஊட்டிய சுத்தி பார்க்கணும் என்ற போன வாரம் நாங்கள் ஊருக்கு‍ போயிருந்த போது‍ அந்தப் பெண் ஆசையாசையாக கூறியது‍ இன்னும் காதில் ஒலித்துக் கொண்டு‍ இருக்கிறது.

****************************

வங்கியில் கடைசி இருப்பாக இருந்த நூறு‍ ரூபாய்க்கும் ஒரு‍ செலவு வந்து‍ விட, அதை எடுக்க ATM வாசலில் நின்று‍ கொண்டிருந்தேன்.  உள்ளே சென்ற ஒரு‍ பெண் நீண்ட நேரமாக மெசினுடன் போராடிக் கொண்டிருந்தார்.    பின்னர் ஒரு‍ மாதிரி குழப்பமான முகத்துடன் வெளியே வந்தவர் வங்கிக்குள் சென்றுவிட்டு‍ மீண்டும் கோபத்துடன் வெளியே வந்தார்.  பக்கத்திலிருந்த மற்றொரு‍ பெண் என்ன ஆச்சுங்க எனக் கேட்க விஷயத்தை சொன்னார்.   ஏடியெம் கார்டை செருகி, கோட் நம்பரை அடித்து‍ விட்டு‍, தொகையையும் குறிப்பிட்ட பின்னர் பணம் வராமல், வெறும் ஸ்டேட்மென்ட் மட்டும் வந்திருக்கிறது.  சரி அதனால் என்ன பிரச்சினை என்கிறீர்களா?

வெறும் நூறுரூபாய்க்கெல்லாம் ஏடியெம் வாசலில் நிற்கும் என் போன்ற பிரகஸ்பதி்க்கெல்லாம் இது‍ பகீர் நிகழ்வுதான்.  ஆமாம் பணத்தை எடுத்தது‍ போல கழித்து‍ காட்டி‍ விட்டு‍, மீதி உள்ள தொகைக்கு‍ மட்டும் ஸ்டேட்மென்ட் வந்திருக்கிறது.  தொகையை எடுத்தது‍ போல டெபிட் செய்திருக்கிறது‍ அந்த ஏடியெம்.

வேறொரு‍ வங்கியின் அட்டையை இந்த வங்கி ஏடியெம்மில் நுழைத்ததால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம்.   எனவே அந்த வங்கியிடமே புகார் தெரிவியுங்கள் என வங்கி அலுவலர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் சொல்லியிருக்கிறார்.


**************************

Saturday, May 7, 2011

தனியார் கோயில்கள்

அது‍ ஒரு‍ வழிபாட்டு‍ தலம்.  வேற்று‍ இனத்தை சேர்ந்த ஒருவன் வழிபட அங்கு‍ வருகிறான்.  கடவுளுக்கு‍ நெருக்கமான (!) ஒரு‍ சிலர் அவனை உள்ளே விட மறுக்கிறார்கள். ஏன் எனக் கேட்ட போது‍ அவனுடைய நிறம், குடிப்பிறப்பு ஆகியன காரணங்களாக காட்டப்படுகின்றன.  பலநாள் முயற்சித்தும் அந்த நவீன நந்தனாருக்கு‍ அனுமதி கிட்டவில்லை.  இறுதியாக ஒருநாள் மிகுந்த மகிழ்வுடன் அத்தலத்தின் வாசலுக்கு‍ வருகிறான்.  அங்கு‍ காவல் காக்கும் ஒருவன் கோபமும், சலிப்புமாக அவனை திட்ட எத்தனிக்கும் போது இவன் கூறுகிறான், "நேற்று‍ என் கனவில் கடவுள் வந்து,  இனிமேல் அங்கே செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.  ஏன் என வினவியதற்கு‍ அவர்கள் என்னையே அங்கிருந்து‍ விரட்டிவிட்டார்கள்.  நான் இல்லாத இடத்தில் உனக்கு‍ என்ன வேலை"  இந்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  இது‍ போன்ற அனுபவத்தை நானும் சமீபத்தில் பெற்றேன்.

மற்ற ஊர்களில் எப்படியோ தெரியவில்லை.  கோவையைப் பொறுத்தமட்டில், இங்குள்ள மில் மற்றும் தொழிற்சாலைகளில் டாய்லட் மற்றும் பணியாளர்களுக்கான ரெஸ்ட் ரூம் வசதி இரு‍க்கிறதோ இல்லையோ அட்டகாசமான ஒரு‍ கோயிலை வாஸ்து‍ பார்த்து‍ கட்டி‍ விடுவார்கள். பெரும்பாலும் பிள்ளையார் கோயில்தான்.   அவரும் நடக்கிற அக்கிரமங்களை பார்த்தபடி‍ தேமே என்று‍ உட்கார்ந்திருக்க வேண்டும்.  அதற்கு‍ தினப்படி‍ பூஜை செய்வதற்கு‍ ஒரு‍ அர்ச்சகர் வேறு‍ வருவார்.  இப்பொழுதெல்லாம் அந்த மாதிரியான கார்பரேட் அர்ச்சகர்கள் பைக்கில்தான் வந்து‍ இறங்குகிறார்கள். மாத இறுதியில் அர்ச்சகர் தன் சம்பளத்திற்காக ஒப்பந்த பணியாளர்களோடு‍  பெஞ்சில், பர்ஸனல் ஆபிஸ் வாசலில் மணியை பார்த்தபடி‍ அமர்ந்திருப்பது‍ சுவாரஸ்யமான கொசுறு‍ செய்தி.  

சரி விஷயத்திற்கு‍ வருகிறேன்.  இது‍ போன்ற கோயில்களுக்கு‍ ஒரு‍ சில விசேஷ நாட்களை தவிர மற்ற நாட்களில்  பொதுமக்களை உள்ளே அனுமதிப்பதில்லை.  உள்ளே செல்வதற்கு‍  பொதுவாக யாரும்  அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை என்பதே கவனிக்க வேண்டி‍ய செய்தி.

ஆனால் ஒரு‍ சில தனியார் நிறுவனங்கள் தங்கள் இடத்தில் அட்டகாசமான ஒரு‍ கோயிலை கட்டியிருப்பார்கள்.  குறிப்பிட்ட அந்த இடம் தொழிற்சாலையாகவோ அல்லது‍ ஏதேனும் ஒதுக்குப்புறமான தோட்டமாகவோ அல்லது‍ மலை பாங்கான பகுதியாகவோ கூட இருக்கலாம்.  அந்த கோயிலுக்கு‍ ஏதேனும் ஒரு‍ விதத்தில் யாரோ ஒரு‍ புண்ணியவான் விளம்பரத்தை தேடிக்‍ கொடுத்துவிட, மின்னல் வேகத்தில் மௌத் அட்வர்டைசிங்கோ ஏதோ சொல்வார்களே, அது‍ போல மக்களிடம் பரவி ஒரு‍ மினி சுற்றுலா தலமாக அந்த கோயி்லை ஆக்கிவிடுவார்கள்.  

அது‍ போல ஒரு‍ கோயிலுக்குத்தான் அண்மையில் செல்லும் வாய்ப்பு வந்தது.  ஆனால் அங்கு‍ போய் சேரும் வரை அது‍ தனியாருக்கு‍ சொந்தமான கோயில் என்று‍ எனக்கு‍ தெரியவி்ல்லை.  அரை கி.மீட்டருக்கு‍ முன்னதாகவே எல்லா வண்டியையும் நிறுத்தி விட்டு‍ நடக்க விட்டார்கள்.   சரி குறுகலான சாலையாக இருப்பதால் இதை பெரிது‍ படுத்த தேவையில்லை என  நினைத்தவாறு‍ நடக்க ஆரம்பித்தோம்.  ஆனால் அந்த காவலர் சொன்ன விதம் இருக்கிறதே,  அப்போதே எனக்கு‍ மைல்டாக ஒரு‍ டவுட் ப்ளஸ் சுவாரஸ்யம்.  இங்கு‍ ஏதோ ஒன்று‍ வித்தியாசமாக நடக்கப் போகிறது‍ என்று. செக்யூரிட்டி‍ மற்றும் வாட்ச்மேன்களின் பேச்சு‍ மற்றும் பாடி‍ லர்ங்வேஜ்களிலேயே ஒரு‍ நிறுவனத்தின் இலட்சணத்தை ஓரளவுக்கு‍ அனுமானிக்க முடியும் என கேள்வி பட்டிருக்கிறேன். 

கோயிலுக்கு‍ சென்றால் வெளி வாசலில் நான்கைந்து‍ தனியார் நிறுவன காவலர்கள் நின்று‍ கொண்டு‍, கோயிலுக்கு‍ வருபவர்களிடம்  கையை ஆட்டி‍ ஆட்டி‍ ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.  விஷயம் இதுதான். குழந்தைகள் சத்தம் போடக் கூடாது‍ ஸாரி கூடாதாம்.  பெண்களின் வளையல், கொலுசு‍ சத்தம் கூட கேட்கக் கூடாதாம்.  உரக்க பேசக் கூடாதாம்.  இது‍ போல பல தாம்கள்.  தவிரவும் ஒருசில அன்புகட்டளைகளை வேறு‍ பலகையில் எழுதி வைத்திருந்தார்கள்.

அதன் ஒட்டுமொத்த சாராம்சம் இதுதான். இது‍ தனியாருக்கு‍ சொந்தமானது‍.  கட்டியவர் இவர்.  கோயில் இருக்கும் நிலம் இன்னாருடையது.  பொதுமக்களி்டமிருந்து‍ தம்பிடி‍ காசை கூட வாங்காமல் கட்டியிருப்பதால் எந்த நேரத்திலும்  காரணமே கூறாமல் கோயிலுக்குள் இருப்பவர்களை வெளியேற்ற நிர்வாகத்திற்கு‍ முழு உரிமை உண்டு‍.  யாரை உள்ளே அனுமதிக்க வேண்டும், வேண்டாம் என்பதில் நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.

இதைப் படித்தால் எந்த வலைப்பூ வைத்திருப்பவனாவது‍ உள்ளே செல்வானா?  இந்த சுயமரியாதை என்ற வார்த்தைக்கு‍ என்ன அர்த்தமோ எனக்கு‍ தெரியாது.  ஆனால் உள்ளே செல்ல மனமில்லாமல் வெளியே அமர்ந்து‍ விட்டேன்.

நீ ஒரு‍ பெரிய ,,,,,,,,,,,,,,,,, ?

கோடிட்ட இடத்தை எந்த வார்த்தையாலாவது‍ நிரப்பிக் கொள்ளுங்கள்.  எனக்கு‍ கவலையில்லை.  ஆனால் என்னுடைய கேள்வி இதுதான்.  உள்ளே இருக்கும் கடவுள் பகட்டான கோயிலைப் பார்த்தோ, வங்கி இருப்பு மற்றும் ஆடம்பரத்தை பார்த்தோ அருள் பாலிப்பதில்லை.  அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என சொல்வார்களே, அது‍ போல அவனருள் பெறவும் அவனுடைய கருணை வேண்டும்.  இராணுவ கண்டிப்பை காட்டுவதற்கு‍ கோயில் தகுந்த இடமி்ல்லை. 

ஆயிரம் சொன்னாலும் அது‍ ஒரு‍ தனியார் கோயில்.  அவர்கள் சொல்வதை கேட்டுதானே ஆக வேண்டும்.  இல்லையென்றால் எதற்காக அங்கு‍ நீ செல்ல வேண்டு‍ம் என நீங்கள் கேட்கலாம். 

கோயிலை பொதுமக்களுக்கு‍ என திறந்து‍ விடும் போதே, ஒரு‍ சில நீக்கு‍ போக்குளையும் செய்ய வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.  இல்லாவிடடர்ல் யாருக்கும் அனுமதி இல்லை என்றே கட் அண்ட் ரைட்டாக சொல்லி விடலாமே. 

இரண்டாவது‍, தராதரம் இல்லாமல் எல்லோரையும் சிறைக் கைதிகளைப் போல விரட்டும் ஊழியர்கள். (அர்ச்சகர்கள் உட்பட)  இவர்கள் முதலாளி சொல்வதை தலையால் செய்து‍ முடிக்கும் அசகாய சூரர்கள்.  என்ன நமக்குத்தான் எரிச்சல் தலை தூக்குகிறது. 

ஆக தெரியாத ஊரில் உள்ள கோயிலுக்கு‍ செல்லும் போது‍ விசாரித்துவிட்டு‍ செல்லவும். (குறிப்பாக வால்பாறைக்கு)

Monday, April 25, 2011

அஞ்சறைப் பெட்டி‍

ஓஷோவின் புத்தகம் ஒன்றில் படித்த ஞாபகம்.  தாத்தாவும், பேரனும் பூங்காவில் நடை பயின்று‍ கொண்டிருந்த போது‍ பேரன் தாத்தாவிடம் கேட்கிறான், ஏன் தாத்தா மரம், செடி‍, கொடியெல்லாம் பச்சையா இருக்குது?

தாத்தா விடையை யோசிக்கிறார்.  குளோரோபில் என்ற பச்சைய சமாச்சாரம் என்றால் பையனுக்கு‍ப் புரியாது‍.    தன் மேலே படும் ஒளியின், பச்சையை தவிர மற்ற நிறங்களை உட்கிரகிப்பதால் பச்சையாக இருக்கிறது‍ என்று‍ சொன்னாலும் அவனுக்கு‍ புரியுமா என்ற சந்தேகம்.  பலமாக சிந்தித்து‍ ஒரு‍ பதிலை இப்படி‍ சொன்னாராம்.

பச்சையாக இருப்பதால் பச்சையாக இருக்குது.

சொல்லிவிட்டு‍ பேரனை பார்த்தார்.  பையனுக்கு‍ பரம திருப்தி.  கரெக்ட் நானும் அதைத்தான் நினைச்சேன் என்று‍ சொன்னானாம். இதற்கு‍ பிறகு‍‍ ஐந்து‍ பக்கங்களுக்கு‍ தத்துவ விளக்கம் கொடுத்திருப்பார் ஓஷோ. 

இதே போல ஒரு‍ நிகழ்ச்சி போன வாரம் நடந்தது‍.   தன் தந்தையிடம்  கேட்கிறான்  அவரது‍ ஏழு‍ வயது‍ பையன்.  ஏன் எல்லா மரமும் பச்சையா இருக்குது. 

தந்தை பதிலளிக்கிறார். மரத்தில் உள்ள இலைகள்ள பச்சையம்கிற ஒரு‍ பொருள் இருக்குது.  அது‍ இருக்கிறதுனால............................

பையன் குழப்பமான முகத்துடன் தந்தையை இடைமறித்து‍ கூறினான்.
போப்பா என்னென்னமோ சொல்ற.   பச்சைத் தண்ணி ஊத்துறதுனால பச்சையா இருக்குது.

***************** 

அந்த சிறுவன் முதன்முதலில் கடலைப் பார்க்கிறான்.  கடலின் பெரும் பரப்பும், அலைகளின் ஆர்ப்பரிப்பும் அவனை சுவாரஸ்யப் படுத்து‍கின்றன.  குளிப்பதற்கு‍ கடலில் காலை நனைக்கிறான்.   விரட்டி‍ வந்த ஒரு‍ சிறு‍ அலை அவனை குப்புற தள்ள, வாய் வழியே கொஞ்சம் கடல் நீர் வாய்க்குள்ளே சென்று‍ விடுகிறது.

கடல் நீரின் உப்புச் சுவை அவனை திக்குமுக்காட வைக்க ஓ, ஓ வென வாயிலிருந்து‍ எச்சிலை துப்புகிறான்.

மிகுந்த கோபத்தோடு‍ தந்தையிடம் கேட்கிறான்.  குளிக்கிற இடத்துல யாருப்பா, இவ்வளவு உப்ப கொட்டி‍ வைச்சுருக்காங்க?
--------------------


Tuesday, April 5, 2011

அஞ்சறைப் பெட்டி‍

நாட்டின் பல பாகங்களில் இன்னும்  உலகக் கோப்பையை நம் அணி வென்றதை வெறித்தனமாக வெடி‍ வெடித்து‍, கொட்டு‍ முரசு‍ கெட்டி‍ கொண்டாடி‍ கொண்டிருக்கும் (எத்தனை ஒத்தக் கொம்பு பாருங்கோ) இவ்வேளையில், தமிழகமோ ஏற்கனவே தேர்தல் களேபரத்தில் அதிரிபுதிரியாக இருப்பதால், வெகு‍ சீ்க்கிரமே கிரிக்கெட்டிலிருந்து‍ வெளியே வந்து‍ விட்டது. 

ஒரு‍ பக்கம், தேர்தல் அலுவலர்கள் கைப்பற்றும் பணத்திற்கு‍ கணக்கு‍ காட்டி,‍  திரும்ப பெற்றுக் கொள்ள ஆட்கள் வராமல் அனாமத்தாக அது‍ கணக்காயர் அலுவலகத்துக்கு‍ சென்று‍ கொண்டிருக்கிறது‍.  இன்னொரு‍ பக்கம் வடிவேலு‍ குடியை மட்டும்  மையமாக  வைத்துக் கொண்டு‍ விஜயகாந்தை விளாசுகிறார்.  மறுபுறம் சிங்கமுத்துவின் எதிர்ப்பாட்டு.    தான் செல்லும் இடங்களிலெல்லாம் ஏதாவது‍ ஒரு‍ சர்ச்சையை கிளப்பும் வண்ணம் விஜயகாந்த் பரப்புரை செய்வது‍ (சன், கலைஞர் டிவிக்களின்படி) என்ன மாதிரியான எண்ணங்களை மக்கள் மனதில் ஏற்படுத்தும் என்பது‍ மே13ல் தெரியும். 

பூத் ஸ்லிப் கொடுப்பதை கூட தானே செய்வதாக அறிவித்திருந்த ஆணையம் தற்போது‍ கட்சிக்காரர்களும் கொடுக்கலாம் என கூறுகிறுது.  ஏன் இந்த திடீர் மாற்றம் என தெரியவில்லை. 

அஸ்ஸாமின் முதற்கட்ட  வாக்குப்பதிவில் 70% வாக்குபதிவாம்.  தமிழகத்தில் 80% பேர் படிப்பறிவு பெற்றவர்கள் என போன வாரம் வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது.  அதன் படி‍ பார்த்தால் குறைந்த பட்சமாகவே 75% ஓட்டுப் பதிவு வர வேண்டும்.  எத்தனை பேர் உலககோப்பையை தொ.காவில் பார்ப்து‍ மட்டுமே  தேசப்பற்றின் உச்சம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது‍ அடுத்த புதனில் தெரிந்து‍ விடும்.

வலம்புரி சங்கோ அல்லது‍ ஏதோவொன்றையோ (கடற்கரையில் கிடைப்பதுதான்)  காதில் வைத்துக் கேட்டால் கடல் இரைச்சல் அதில் கேட்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன்.   அதே போல அனாமத்தாக ஆங்காங்கே பிடிபடும் பணக்கட்டுகளை காதில் வைத்து‍ கேட்டால் "டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா .........."  பாடல் கேட்கிறதாமே. 

(டீக்கடையில் யாரோ இருவர் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டது‍ சார்)
************************
இதோ இந்த வாரத்தோடு‍ என் அருமைப்புத்திரனுக்கு‍ பரீட்சை முடிகிறது.  அடுத்து‍ வரக்கூடிய ஒன்றரை மாதங்களும் அடடடடா............... நினைக்கவே பயமாயிருக்கிறது.  எங்கள் தெருவில் இறங்கும் ஒட்டுமொத்த வெயிலும் இவனை ஒத்த பையன்கள் மீதுதான் விழும்.  மருத்துவச் செலவு, தின்பண்ட செலவு என இப்போதே கொஞ்சம் எடுத்து‍ வைக்க வேண்டும்.  என்ன அவனுக்கு‍ தாத்தா, பாட்டி‍ கண்காணிப்பது‍ இருப்பதால், நமக்கு‍ கொஞ்சம் டென்ஷன் குறைவுதான்.
***********************
நேற்று‍ சனி கிரகத்தை தேடித் தேடி‍ பார்த்ததில் என் கண்களுக்கு‍ சிக்க மாட்டாமல் எங்கேயோ ஒளிந்து‍ கொண்டார்.  (நல்லவேளை கனவில் வந்து‍ - ஒத்த சாதிக்கார பயல்களுக்கு‍ தரிசனம் காட்டுவதில்லை என்று‍ சொல்லவில்லை)    வானில் இது‍ போல, மூன்று‍ மாதங்களுக்கு‍ ஒருமுறை  ஏதேனும்  நிகழ்ந்து‍  கொண்டுதான் இருக்கிறது.   இதில் உள்ள  திரில்லே இது‍ போல  மீண்டும்  நிகழ்வதை நாம் பார்ப்பதற்கு‍‍ பல்லாண்டு‍ பல்லலாண்டு‍ பல்லாயிரத்தாண்டு‍ வாழ வேண்டும்.  அவ்வளவுதர்ன்.

இந்த வானியல் நிகழ்ச்சிக்கு‍ ஒத்த ஒரு‍ காலகட்டத்தை நீண்ட காலத்திற்கு‍ பிறகு‍ நமது‍ மாநிலம் தற்போது‍ சந்திக்க போகிறது.  ஆம் தேர்தல் முடிந்த மறுநாளிலிருந்து‍ மே13ல் ரிசல்ட் வந்து‍, அடுத்த அரசு‍ பதவி பிரமாணம்‌ எடு்க்கும் வரையிலான இந்த ஒரு‍ மாதம் அரசு‍ இயந்திரம் எப்படி‍ சுழலும்(!)  யார் சுழற்றுவார்கள்.  ஜனாதிபதி ஆட்சிக்கு‍ நிகரான இக்காலகட்டத்தில் பத்திரிகைகளுக்கு‍ மாநில அளவில் என்ன செய்தி கிடைக்கும்.   கள்ளக்காதலி சதக் சதக் கொலை, பிக்பாக்கெட்காரனுக்கு‍ தர்ம அடி, வேப்பமரத்தில் அம்மன் உருவில் பால் வடிகிறது‍ போன்றவைகளுக்கு‍ எட்டு‍ கால அளவில் இடம் கிடைக்கலாம்.  கருத்து‍ கணிப்புகளுக்கு‍ தடை.  இலவச அறிவிப்புகளுக்கு‍ வாய்ப்பு இல்லை.  அரசு‍ ஊழியர்களுக்கு‍ ஜாக்பாட் அறிவிப்பு இல்லை.  அந்த தொண்டர்கள் இங்கே வந்தார்கள்.  இவர்கள் அங்கே சென்றார்கள்.  பாதிபேர் நடுவில் மாட்டிக் கொண்டார்கள் போன்றவையும் நடக்க வாய்ப்பி்ல்லை.  எதிர்கட்சியும் கிடையாது.  ஆளுங்கட்சியும் கிடையாது‍.  கூட்டணி பற்றி  தெரியவில்லை.  என்ன ஒன்று,  ஐ.பி.எல்லை எவ்வித தொந்தரவும் இன்றி ரசிக்கலாம்.
*********************
திமுகவிற்கு‍ ஆதரவு கேட்கும் விளம்பரப் பாடல்கள் கலைஞரில் ஒளிபரப்பாகின்றன.  அடுத்து‍ புதிதாக துவங்கும் ஏதோவொரு‍ சீரியலுக்கான முன்னறிவிப்பு பாடல் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன்.  ‍அப்புறம்தான் இது‍ தேர்தல் பரப்புரை பாடல் என்று‍ தெரிந்தது.  ஒவ்வொரு‍ பாடலையும் வெரைட்டியாக எடுத்திருக்கிறார்கள்.  ஒளிபதிவு, இயக்கம், இசை, நடிப்பு, நடிக-நடிகையரை தேர்வு செய்தது‍ என ஒவ்வொன்றிலும் மிகுந்த‍ கவனத்தை செலுத்தியிருக்கிறார்கள்.

முன்னெல்லாம் தேர்தல் என்றால் ஏதாவது‍ ஒரு‍ பல்லு‍ போன கிழவியோ அல்லது‍ குடு‍ குடு‍ கிழவனாரோ போஸ்டரில் அரசியல் கட்சித் தலைமையின் அரவணைப்பி்ல் சிரித்து‍ கொண்டிருப்பார்கள்.  (மிரண்டு‍ போய்தான்)  ஆனால் இந்த பாடல்களில் வருபவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள்தான்.  காலம் மாறிவருவதை தேர்தல் பிரச்சாரமும் உணர்த்துகிறது.

Thursday, March 31, 2011

சின்ன (அதிகப்பிரசங்கித்தனமான) சந்தேகங்ணா!

பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானி மற்றும் இந்தியப் பிரதமர் இருவருமாக சேர்ந்து‍ நேற்று‍ கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியை மொகாலி மைதானத்தில் அருகருகே அமர்ந்து‍ ரசித்து‍ பார்த்தது‍ ஒரு‍ செய்திதான்.  ஆனால் அவர்கள் அமைதியாக ரசித்‌து‍ பார்க்க தகுந்த பாதுகாப்பு சூழ்நிலையை உருவாக்க, பின்னணியில் இருந்து ‍ உழைத்த காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரை எண்ணிப் பார்க்கும் போதுதான் ஒரு‍ சின்ன சந்தேகம் வருகிறது.

கடந்த உலககோப்பையில் இந்தியா தோல்வியடைந்தபின், கபில்தேவ் ஐ.சி.எல் என்ற அமைப்பை உருவாக்கி கிரிகெட் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார்.  வரும்படி‍ வராமல் போகும் என்ற பயத்தில் அதற்கு‍ போட்டியாக  பி.சி.சி.ஐ.யும்  ஐ.பி.எல் என்ற அமைப்பை உருவாக்கி கல்லாவை திறம்பட கட்டி‍ வருகிறது‍  அப்போது‍ ஏற்பட்ட சலசலப்பில் ஒரு‍ விஷயம் மக்களுக்கு‍ தெளிவானது‍.  பி.சி.சி.ஐ என்பது‍ அரசாங்க அமைப்பல்ல.  தனியார் அமைப்புதான்.  இன்னும் சொல்லப்போனால் கிரிக்கெட்டை நடத்தும் ஒரு‍ சங்கம் மட்டுமே.  ஆனால் கைப்புள்ள சங்கத்துடன் ஒப்பிட முடியாதபடிக்கு‍ கோடிக்கணக்கான ரூபாய்களை சொத்தாக கொண்ட ஒரு‍ அமைப்பு.  எந்த இடத்தி்லும் இந்திய அரசுக்கு‍ கட்டுப்படவேண்டிய அவசியமில்லாத ஒன்று.

சரி என்னுடைய சந்தேகத்துக்கு‍ வருகிறேன்.  எங்கு‍ மேட்ச் நடந்தாலும் சரி, நுழைவுச்சீட்டு‍ வாங்கும்போது‍ ரசிகர்களை அடித்து‍ உதைத்து‍  வரிசையில் ஒழுங்குபடுத்துவதிலிருந்து, வந்த வெளிநாட்டு‍, உள்நாட்டு‍ வீரர்கள் ஆட்டம் முடிந்து‍ பாதுகாப்பாக  ஊர் போய் சேருவதிலிருந்து‍  பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பெறும் பொறுப்பு காவலர்களுக்கு‍ உண்டு. சில நேரங்களில் இராணுவத்தையும் ஈடுபடுத்தி பாதுகாப்பை பலபடுத்துகிறார்கள். 

ஒரு‍ தனியார் அமைப்பு நடத்தும் விளையாட்டு‍ போட்டிக்கு‍ அரசு‍ அமைப்பான காவல்துறையையும், இராணுவத்தையும் பாதுகாப்பிற்காக  துணைக்கு‍ அழைக்கும் போது‍  கட்டணமாக ஏதாவது‍ ஒரு‍ தொகையை  அரசுக்கு‍ அவர்கள் செலுத்துகிறார்களா?  விளையாட்டு‍ போட்டிக்கு‍ பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறைக்கு‍ கட்டணம் செலுத்த தேவையில்லை என்று‍ ஏதேனும் சலுகையை அரசிடம் பெற்றிருக்கிறார்களா?  இல்லை இவ்வாறு‍ இண்டர்நேஷனல் மேட்ச் நடக்கும் போது‍ விஷயத்தை மட்டும் காவல்துறையிடம் தெரிவித்தாலே, இலவசமாக(!)  பாதுகாப்பு கொடுக்க வேண்டியது‍ அவர்களது‍ கடமையா?

ஒருகேட்சுக்கு‍ பத்தாயிரம், Fourஅடித்தால் ஒரு‍ தொகை, சிக்ஸ் என்றால் ஒரு‍ தொகை, நூறு‍, ஐம்பது‍ என   அடித்தால் கணிசமான தொகையை வீரர்களுக்கு‍ அள்ளி வழங்கும் சங்கம் டிக்கெட் விற்பனையிலும், விளம்பர வருவாயிலும், டிவிக்களுக்கு ஒளிபரப்பு உரிமையை கொடுப்பதிலும் சங்கம் ‍ ஒரு‍ கணிசமான தொகையை பார்த்து‍ விடுகிறது. எனவே பாதுகாப்பிற்கென கட்டணம் செலுத்துவதில் எந்த நிதிச் சிக்கலும் (!) அவர்களை அண்ட வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.  

எல்லோருடைய நாட்டுப்பற்றையும் (பிரதமர், முதலமைச்சர்கள் உள்பட) காசாக்க தெரிந்த இந்த அமைப்பிற்கென்று‍ என்னவிதமான சமூக நலச் சிந்தனை இருக்கிறது‍ என்பது‍ம் மேற்படி‍ சந்தேகத்தின் கிளை சந்தேகம்தான்.

பி.கு‍:  நாடு‍ முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் பரவலாக பரிட்சை நடந்து‍ கொண்டிருந்த சமயம்.  இரண்டாவது‍ ஐ.பி.எல்லை ஒரு‍ மாதம் ஒத்தி வையுங்கள் என்று‍ கோரிக்கையை வைத்த போது‍, எதற்காகவும் அட்டவணையை மாற்ற (புடலங்காய் அட்டவணை) முடியாது‍ என்று‍ வாதிட்டு‍ ஆட்டத்தை தெ.ஆப்பிரிக்காவிற்கு‍ மாற்றி அதே மாதத்தில் நடத்தி காட்டிய அஞ்சா நெஞ்சன்தான் நம்ப லலித் மோடி.

Tuesday, March 29, 2011

அட அப்படியா?

ஒரு‍ "நொடி"யின் அருமையை உணர வேண்டுமானால் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றவரிடம் கேளுங்கள் என சொல்வது‍ வழக்கம்.  ஆனால் இந்த விஷயத்தை படித்தால், நீங்கள் இப்போது‍ அந்த சொலவடையை  பரிசீலனை செய்ய வேண்டியது‍ வரும். 

1969ஆம் ஆண்டு‍ விண்வெளி வரலாற்றில் ஒரு‍ மைல்கல்.  ஆம், அந்த வருடம்தான் முதன்முதலில் ஒரு‍ மனிதனின் காலடி‍ தடம் பூமிக்கு‍ வெளியே ஒரு‍ துணைக்கிரகத்தில் பதிந்தது.  பதிந்த இடம் நிலா, பதித்தவர் ஆம்‌ஸ்ட்ராங்.  இரண்டாவதாக பதித்தவர்‌ ஆல்டிரின்.  இதுவரைக்கும் பள்ளியில் படித்திருப்பீர்கள். 

ஆனால் முதன்முதலி்ல் காலடி‍ தடம் எடுத்து‍ வைக்க வேண்டியது‍ ஆல்டிரின் தானாம்.  அப்பல்லோ நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து,‍ பைலட் பர்ஸ்ட் என கட்டளை வருகிறது.  ஆனால் ஆல்டிரினுக்கு‍ ஒரு‍ சின்ன தயக்கம்.  எந்தக் காலை வைத்து‍ இறங்குவது, முதன் முதலில் இறங்குகிறோம், என்ன ஆகுமோ?  அப்படியே உள்ளே இழுத்து‍ விடுமா அல்லது‍ சுடு‍ மணலாக இருந்து‍ அப்படியே பஸ்பமாக்கி விடுமா என்றெல்லாம் ஒரு‍ கணம் தயங்கிகொண்டிருந்த வேளையில், இரண்டாவது‍ ஆணை நாசாவிலிருந்து‍ வருகிறது.  கோ பைலட் நெக்ஸ்ட் என்று.  ஆமாம் கோ பைலட்டாகத்தான் உடன் சென்றார் துணிச்சல்கார - முன்னாள் அமெரிக்க கப்பல் படை வீ்ரர் ஆம்ஸ்ட்ராங். 

தாமதிக்காமல் தன் காலை எடுத்து‍  நிலவில் பதித்தார் ஆம்ஸ்ட்ராங்.  நிலவு முதன் முதலில் அவரின் காலடி‍ தடத்தை தன் மேல் பதித்து‍ கொண்டது.  ஒரு‍ கண நேர தாமதத்தினால் நிகழ்ந்த இச்சம்பவம் ஆல்டிரினை பின்னுக்கு‍ தள்ளி, வரலாற்றில் ஆம்ஸ்ட்ராங்கை - முதன் முதல் என்ற தலைப்பின் கீழ் - தன்னுள் ஏற்றுக் கொள்வதற்கு‍ ஒரு‍ வாய்ப்பை வழங்கி விட்டது‍ ஒரு‍ சுவாரஸ்யமான விஷயம்தான்.

ஒரு‍ நிமிடத் தயக்கம் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டுவதற்காக மேற்படி‍ சம்பவத்தை, இந்த வாரம் வெளியாகியுள்ள நமது‍ நம்பிக்கை இதழில் அட்டகாசமான ஒரு‍ கட்டுரையாக வெளியிட்டுள்ளார்கள்.  படித்து‍ பாருங்கள்.

நன்றி: நமது‍ நம்பிக்கை இதழ்  ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா.

பி.கு‍: எங்கேயோ படித்த ஞாபகம்.  மேற்படி‍ இருவரின் காலடி‍ தடமும் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு‍ எந்தவித சேதாரமும் ஆகாமல் அப்படியே நிலவில் இருக்குமாம்.

Monday, March 28, 2011

அஞ்சறைப் பெட்டி‍

எங்கள் ஊர் சிவன் கோயிலில் சிவராத்திரி உற்சவம்.  ஒரு‍ வார கொண்டாட்டம். தினமும் மாலையில் பஜனை மற்றும் ஆன்மீக சொற்பொழிவு என திருவிழா களை கட்டும்.  இந்த வருடம்  சொற்பொழிவு வாசுகி மனோகரன்.  எதிர்பார்த்த கூட்டம் பந்தலில் இல்லை.  வருடப்பிறப்பு, பிரதோஷம் தவிர மற்ற நாட்களில் எங்கள் பகுதி மக்கள் யாரும் கோயிலில் உள்ள சாமிகளை தொந்தரவு செய்வதில்லை.  எனவே நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு‍  அரை மணி நேரம் முன்பிருந்தே யாரோ ஒருவர் மைக்கில் பக்தர்களை வலுக்கட்டாயமாக பந்தலுக்கு‍ள் தள்ளி விட்டுக் கொண்டிருந்தார்.  அப்படியும் பந்தலுக்குள் சொற்ப அளவிலான கூட்டம்தான்.  பெரும்பாலும் சீனியர்ஸ்.

நிகழ்ச்சி துவங்கியது.  எளிமையான பந்தலலங்காரம்.  கம்பீரத்துடன் பேச்சை துவக்கியவர், சொற்ப அளவிலான கூட்டத்தை பார்த்து‍ துணுக்குறாமல்,   அட்டகாசமான ஒரு‍ பஞ்ச் கொடுத்தார் வாசுகி.  பொது‍க்கூட்டம் என்றால் எல்லோரும் வருவர்.  ஆனால் இங்கு‍ நடப்பதோ கலெக்டர்கள் மாநாடு.  எனவே வி.ஜ.பிக்களுக்கு‍ மட்டும்தான் இடம்.  அவர்களுக்குத்தான் இந்த இடத்தின் மதிப்பு புரியும், தெரியும்.  கூட்டம் கைதட்டி‍ ஆரவாரி்த்தது.

********************
ஆறாம் வகுப்பு படிக்கும் போது‍ மணியின் மௌன ராகத்தை முதன்முதலில் டெக் என்ற ஒரு‍ சமாச்சாரத்தில் என் பெரியப்பா வீட்டில் பார்த்தேன்.  கலர் டிவி, ரிமோட், டெலிபோன், டெக், பிரிட்ஜ் என அப்போதைய பல புதிய வரவுகளை அங்குதான் முதன்முதலில் நான் பார்ப்பது‍ வழக்கம்.  தலையணை சைஸ் வீடியோ கேசட்டையும் முதன்முதலில் பார்த்தது அங்கேதான்.  தஞ்சையிலிருந்த வீடியோ கேசட் வாடகைக்கு‍ விடும் கடையிலிருந்து‍ ஒரு‍ பையன், முப்பது‍ - நாற்பது‍ கேசட்டுகளை ஒரு‍ பையில் போட்டு,‍ சைக்கிளில் சுமார் பத்து‍ கிலோமீட்டர்  மிதித்து‍  வந்து‍ வேண்டியதை கொடுத்துவிட்டு‍ செல்வதையும் பார்த்திருக்கிறேன்.

ஆனால் மௌனராகம் கேசட் டெக் வாங்கும் போதே இலவசமாக கொடுத்தார்களா அல்லது‍ விலைக்கு‍ வாங்கியதா எனத் தெரியவில்லை.  கோடை விடுமுறை முழுவதும் அங்கிருந்த நாட்களில் பல தடவை அத்திரைப்படத்தை  பார்த்திருக்கிறேன்.  கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு‍ப் பிறகு‍ அந்தப் படத்தை நேற்று‍ டிவியில் பார்த்தேன்.  இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு‍ பார்க்கும் போதும் படம் சுவாரஸ்யம் குறையாமல் இக்காலத்திற்கு‍ ஏற்றவாறும் இருந்தது‍ வியப்பாக இருந்தது. (ஒரு‍ சில காட்சிகள் தவிர)

வி.கே.ஆர் மற்றும் மெக்கானிக் சிங் சம்பந்தப்பட்ட காட்சிகளின் போது‍ விழுந்து‍ விழுந்து‍ சிரித்த ஞாபகம்.  இப்போது‍ அந்த சீன்கள் புன்னகையைக் கூட வரவழைக்கவில்லை. 

ஒரு‍  எம்.டி.‍ தன்னுடைய ஊழியரை வி.கே.ஆரைப் போல நடத்துவாரா என்பது‍ மிகப்பெரிய கேள்வி. 

பாடல் காட்சிகளின் சுவாரஸ்யம் இன்னும் குறையவில்லை.  (பனி விழும் இரவு ....... பாடல் காட்சிக்கு‍ ஆடிய  அந்த தாடிக்காரர் யார்?  இப்போது‍ எங்கே இருக்கிறார்?)

இறுதியாக ஒரு‍ ஆசை.  இயக்குநர் இந்தப் படத்தை அதே மோகன் மற்றும் ரேவதியைக் கொண்டு‍ விட்ட இடத்திலிருந்து‍ பார்ட் டூ எடுக்க வேண்டும். 

Friday, March 25, 2011

கவிச் சக்கரவர்த்தி

அரசவையில் எப்போதும் எதிரும் புதிருமான நபர்கள் கம்பனும், ஒட்டக்கூத்தரும்.  அன்றும் வழக்கம் போல அவை கூடியது.  வழக்கமான அலுவல்களுக்கு‍ப் பிறகு‍  ஒரு‍ சுவாரஸ்யமான போட்டி‍  மேற்படி‍ இருவருக்கும் துவங்குகிறது. 

கம்பர் ஒரு‍ பாடலைப் பாடுகிறார்.  பாடலின் பொருள் நயத்தில் மூழ்கி அரசன் அகமகிழ்கிறான்.  ஒட்டக்கூத்தரோ எதிர்பார்த்தது‍ போலவே முகத்தை திருப்பிக் கொள்கிறார்.  அரசன் இதைப் புரிந்து‍ கொண்டு‍ கூத்தரை எதிர்கவி பாடும்படி‍ கேட்கிறான். கம்பர் பாடிய பாடலில் நாயகியை மெல்லிடையாள் என வர்ணித்திருக்க, கூத்தரோ தன் தலைவியை பிடியுடையாள் என வர்ணித்து‍ பாடல் புனைகிறார்.  ஒரு‍ கைப்பிடிக்குள் அவளின் இடை அடங்கி விடுமாம்.

இப்போது‍  கம்பனி்ன் முறை.  புன்னகைத்தவாறே பாடல் புனைகிறார்.  நாயகிக்கு‍ அவர் கொடுப்பது‍ கொடியிடை.  அதாவது‍ அவரை, பரங்கி போன்ற கொடி‍கள் எந்தளவிற்கு‍ தடிமனாக இருக்குமோ அந்தளவிற்கான இடையாம்.   ஒட்டக்கூத்தர் பக்கம் இப்போது‍ எல்லோரும் பார்க்க,  எடுத்த எடுப்பிலேயே நூலிடையாள் எனப் பாடலை ஆரம்பித்து‍ பந்தை பவுண்டரி்க்கு‍ விரட்டுகிறார்.

பிடி, கொடி, நூல் இதை விட மெல்லிய ஒன்றை உவமையாக சொல்ல முடியுமா?  பந்து‍ இப்போது‍ கம்பரின் களத்தில்.  அசராமல் தன் கவியை உரைக்க ஆரம்பி்க்கிறார் கவிச்சக்கரவர்த்தி.  எல்லோரும் ஆவலாக நாயகியி்ன் இடையையே கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். (!)

ஒரே போடாக போட்டார் கம்பர்.  ஆம் தன் நாயகிக்கு‍ இடு்ப்பு என்று‍ ஒன்று‍ இல்லலே இல்லையாம்.  அதாவது‍ இடை என ஒன்று‍ அவளுக்கு‍ இருக்கிறதா, இல்லையா என எதிரில் இருப்பவர் குழம்பி போகும் அளவுக்கு‍ மெல்லிய இடையாம்.

ஒட்டக்கூத்தர் இந்த பாடலுக்கு‍ அசந்து‍ போய் கை தட்டி‍ வாழ்த்தினாரா என்றெல்லாம் தெரியவில்லை. 



இலவச அறிவிப்புகள்

மாறி மாறி இரு‍ கழகங்களும் இலவச அறிவிப்புகளை வெளியிட்டதில் சாமானிய தமிழன் கொஞ்சம் கிறுகிறுத்துத்தான் இருக்கிறான்.  நேற்று‍ வரை இலவசம் கூடாது‍ என சொல்லிக் கொண்டு‍ இருந்தவர்கள் தேர்தல் ஜுரத்தில் ஆடு, மாடுகளை எல்லாம் சேர்த்து‍ சொல்லி விட்டிருக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் தேர்தல் முடிந்தபின் பார்த்துக் கொள்ளலாம் என்ற துணிவு காரணமாக இருக்கலாம்.  ஆனால் யார் வந்தாலும் இரண்டு‍ ஆண்டுகளில் குறைந்தது‍ ஐம்பது‍ சதத்தையாவது‍ நிறைவேற்றி ஆக வேண்டும்.  இல்லாவிட்டால் இன்னும் இரண்டு‍ ஆண்டுகளில் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் மக்களின் கோபம் பிரதிபலிக்கும் வாய்ப்பு அதிகம். 

அவர்களாவது‍ போன தடவை சொல்லிய மாதிரி சிலவற்றை கொடுத்து‍ விட்டார்கள்.  ஒருவேளை இப்போது‍ இவர்கள் வந்து‍ விட்டால், அவர்களைப் போலவே கொடுத்து‍ ஆக வேண்டிய கட்டாயம் வந்து‍ விடும்.  இல்லாவிட்டால் இவர்கள் சொன்ன இலவச அறிவிப்புகளே ஆப்புகளாக மாறவிடக் கூடிய அபாயம் அதிகம். 

இன்னொறு‍ விஷயம்  அவர்கள் வந்து, ஏதும் கொடுக்க முடியாவிட்டாலும் கூட பெயரில் முன் பாதி இருக்கிறது, ஆனால் என் செய்ய பின்பாதிதான் பற்றாக்குறை என்பது‍ போல ஏதாவது‍ பேசி, நிலைமையை ஒத்திப் போடலாம் அல்லது‍ இலவசங்களை தராமல் போன தடவை கொடுத்ததையே திருப்பி திருப்பி சொல்லி சமாளிக்கலாம்.  ஆனால் இவர்களுக்கு‍ எந்த வித சாய்ஸ்ம் இல்லை என்றே நினைக்கிறேன்.   ஆட்டம் கொஞ்சம் சூடாகத்தான் ஐந்து‍ ஆண்டுகளும் இருக்கும்.

இலவச அறிவிப்புகளை அறிவித்ததன்  மூலம் இருவருமே மக்களிடமிருந்து‍  சம   தொலைவில்தான்   இருக்கிறார்கள்.  2G தவிர்த்து‍ பார்த்தால் (?)   பிரச்சாரமே    மக்களிடம்     எடுபடும் என்று‍ நினைக்கிறேன்.   பிரச்சாரத்தின் வீச்சும், அடர்த்தியும் எந்த அளவிற்கு‍ பலம் பெறுகிறதோ அந்த அளவுக்கு‍ வோட்டு‍ வங்கியின் பலமும் கூடலாம்.  இந்த நேரத்தில்தான் புரட்சிப்புயல் போன்ற பேச்சாளர்களின் தேவை இவர்களுக்கு‍ தேவைப்படுகிறது.  ஆனால் என்ன செய்ய, அதீதமான தன்னம்பிக்கை (தன் மேல் +  மக்கள் மேல் + 2G) காரணமாக அவரை கழட்டிவிட்டது‍ எந்தளவிற்கு‍ பின்னடைவை தரும் என்பது‍ மே-ல் தெரிந்து‍ விடும்.

தொண்ணூறுகளின் மத்தியில் கட்அவுட் மற்றும் கூம்பு ஒலி பெருக்கிகளுக்கு‍ சேஷன் முட்டுக்கட்டையிட்டார்.   இப்போது‍ சுவரை அலங்கோலமாக்கும் சுவர் விளம்பரம், கொடி‍, தோரணம், பண விநியோகம், செலவு கணக்கு‍ என பலவற்றி்ற்கான கணகாணிப்பை பலப்படுத்தியிருக்கிறது‍ ஆணையம்.   இனி வரும் காலங்களில் -  அடுத்த எம்.பி தேர்தலிலேயே இந்த இலவச அறிவிப்புகளுக்கான தடையை ஆணையத்திடம் எதிர்பார்க்கலாம் என கருதுகிறேன்.

பி.கு‍: தேர்தல் தேதியை அறிவித்து‍, தேர்தல் பிரச்சாரத்தின் போது‍ இலவச அறிவிப்புகளை வெளியிட்டால்தானே சிக்கல்.  ஆறு‍ மாதத்திற்கு‍ முன்பே அறிவி்த்து‍ விட்டால் பிரச்சனை வராது‍ என்று‍ முன் கூட்டியே சொல்லி விடுவார்களோ.  வாழ்க ஜனநாயகம்

Thursday, March 24, 2011

வராஹி சுவாமிகள்

சைவம்தான் சிறந்தது.  அசைவம் என்பது‍ ஒரு‍ உயிரைக் கொன்று‍ புசிப்பதால் அது‍ மனிதகுலத்திற்கு‍ விரோதமானது.  ஒவ்வொரு‍ தாவரத்திற்கும் உயிர் உண்டு‍  என்பதை   அறிவியலும் சரி, ஆன்மீகமும் சரி இரண்டுமே ஒப்புக் கொள்கின்றன.  அப்படியென்றால் கீரையை வேரோடு‍ பிடுங்கி சமைத்து‍ உண்கின்றோமே, அது‍ பாவம் இல்லையா?

எலுமிச்சம் பழத்தை கோயிலில்‍ கொடுப்பது‍  ஏன்?

எந்தவித நோயும் குழந்தைகளை அண்டாமல் இருக்க கொடுக்க வேண்டிய மருந்து‍ எது?

எங்கள் பகுதி காந்தி சர்வோதயசங்கத்தில் பணியாற்றும் திரு.கண்ணன் அவர்கள் ஒரு‍ நல்ல காரியத்தை சத்தமில்லாமல் செய்து‍ வருகிறார்.  தினமும் காலை ஆறு‍ மணி முதல் ஏழு‍ முப்பது‍ வரை கடை வாசலில் அருகம்புல் சாரு, வாழைத்தண்டு‍ சாறு‍ மற்றும் சோற்றுக் கற்றாழை சாறு‍ ஆகியவற்றை, அன்றன்றைக்கு‍ தயார் செய்து‍ விற்று‍ வருகிறார்.  ஆரம்பத்தில்‌ சற்று‍ டல்லடித்த வியாபாரம் விஷயம் தெரிந்தவர்களின் பேராதராவினால் இப்போது‍ வெகு‍ சுறுசுறுப்பாக  போய்க் கொண்டு‍ இருக்கிறது‍ என்பது‍ மகிழ்வான செய்தி.  குறிப்பாக காலையில் நடைபயிற்சி செய்பவர்கள், ஜிம்முக்கு‍ செல்பவர்கள் மற்றும் நீரிழிவுக்காரர்கள் இந்த வாய்ப்பை நன்கு‍ பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

உண்மையாகச் சொல்கிறேன், உங்கள் பகுதியில் யாராவது‍ இதுபோல விற்பனை செய்து‍ கொண்டிருந்தால் அருகம்புல் சாறை தவறாமல் வாங்கி அருந்துங்கள். காரணம் கடந்த சில மாதங்களாக என் தலைமுடி‍ சகட்டு‍ மேனிக்கு‍ கொட்டிக் கொண்டிருந்தது.  எங்கள் குல வழக்கப்படி‍ முப்பது‍ வயதைத் தாண்டும் போது‍ தலையில் பாதியிடம், காலி மனையாக இருக்க வேண்டும். இந்த வழக்கத்தை என் தந்தை மற்றும்  தம்பிகள் விதியை நொந்தபடி‍ ஏற்றுக் கொள்ள, எனக்கோ என் தாயின் உடல் வாகு சற்று‍ ஆறுதலைக்  கொடுத்தது.  அருகம்புல் போல தலைமுழுதும் முடிக்கற்றைகள்  பழைய பட ராம்கி போல அலைபாயும். 

திடீரென்று‍ சகட்டுமேனிக்கு‍ முடி‍ கொட்ட ஆரம்பிக்க நானும் மனதளவில் தயாராகி விட்ட சமயம்,  இந்த அருகம்புல் சாறு‍ எனக்கு‍ கை கொடுத்  ........... ஸாரி தலைமுடி‍ கொடுத்தது.  ஆமாம் கடந்த இரு‍ மாதங்களாக தினமும் ஒரு‍ டீகப் அளவில் இந்த சாறை குடித்த புண்ணியம் முடி‍ கொட்டுவது‍ கிட்டத்தட்ட நின்றே விட்டது‍. 

அருகம்புல் சாறுடன் சிறிதளவு மணத்தக்காளி கீரை மற்றும் வில்வ  இலையையும் சேர்த்து‍ பிழியப்பட்ட சாறு‍, இரத்தத்தில் உள்ள நச்சுகளை பிரித்து‍ எடு்க்கிறது‍; மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது.  பெண்களுக்கு வரும் பலவித பிரச்சனைகளுக்கு‍ இது‍ ஒரு‍ அருமருந்து.  குறிப்பாக இதில் உள்ள செல்லுலோஸ் மற்றும்  குளோரோபில் பல மருத்துவ குணநலன்கள் உடையன.

நண்பர்களிடம் சென்ன போது‍ ஹி.............ஹி   ................ ஆடு‍ மாடுகளுக்கு‍  போட்டியா நாங்க வரல...... என்று‍ ஒதுங்கி கொண்டார்கள்.  அவற்றை சாப்பிடும்போது‍ வராத இரக்கம் இப்போது‍ மட்டும் எங்கிருந்து‍ வந்தது‍ என கேட்டேன்.

மேற்சொன்ன கண்ணன் அவர்களும், சேவாப்பூர் மாணிக்கம் என்ற யோகாப் பேராசிரியருமாக சேர்ந்து‍ அருகிலுள்ள ஒரு‍ பள்ளியில் சிறு‍ நிகழ்ச்சி ஒன்றை கடந்த ஞாயிறன்று‍ ஏற்பாடு‍ செய்து‍ அதை வாடிக்கையாளர்களிடம் கூறி எல்லோரையும் அவசியம் வருமாறு‍ அழைத்திருந்தாரக்ள்.   தலைப்பு: இயற்கை உணவு மற்றும் உடல்நலம்.  பேசுபவர் சுவாமி வராஹி சுவாமிகள்.  அனுமதி இலவசம்.

ஆனால் நம்மாட்கள் ஞாயிறன்று‍ பல உயிர்களுக்கு‍ கதி மோட்சம் கொடுக்க சென்று‍ விட்டதாலும், கிரிக்கெட் வேறு‍ இடையில் புகுந்ததாலும் நிகழ்ச்சி சொன்னபடியே சிறு‍ நிகழ்ச்சியாகவே அமைந்து‍ போனது.  ஆமாம் வந்தது‍ எண்ணி எட்டு‍ பேர்.  ஆனாலும் எந்த முகச் சுளிப்பையும் காட்டாது‍ சுவாமிகள் கலந்து‍ கொண்டு‍ பல இயற்கை உணவுகளைப் பற்றியும், மருந்துகளைப் பற்றியும் குறிப்பிட்டது‍  பயனுள்ளதாக இருந்தது.

அங்கு‍ அவர் கேட்ட கேள்விதான் மேலே உள்ள முதல் மூன்று பத்திகளும்.

1)  ஒரு‍ உயிரை கொன்றால், உதாரணமாக ஆட்டை கொன்றால் அதை உருவாக்கும் திறமை மனிதனுக்கு‍ இல்லை.  ஏதாவது‍ இரு‍ ஆடுகள் மனது‍ வைத்தால்தான் மூன்றாவது‍ ஒன்று‍ உருவாகும்  ஆனால் தாவரங்கள் அபப்டியல்ல.  உற்பத்தி செய்யும் வித்தை, முறை மனிதனுக்குத்‍ தெரியும்.  எனவே சைவம்‌ சிறந்தது.

2)  காலையில் தியானம் செய்வது‍ சிறந்தது.  படிப்பது‍ கூட மனதில் அப்படியே பதியும்.  இவையெல்லாம் ஏன்? எப்படி?  காற்றில் உள்ள ஓசோன் சக்தி பூமியில் காலை நேரத்தில் பரவியிருப்பதுதான் காரணம்.  இந்த சக்தி மனித உடலில் புகுந்து‍ பலவிதமான தூண்டுதல்களை செய்கிறது.  மனதை அமைதிபடுத்தி, நினைவாற்றலை தூண்டுகிறது. 

காலை நேரம் தவிர மற்ற நேரங்களில் இதை எப்படி‍ பெறுவது?  கோயில் கோபுர கலசங்கள் செம்பால் ஆனவை.  இதற்கு‍ ஒரு‍ சிறப்பம்சம் உண்டு.  ஓசோனை சேகரித்து‍ அப்படியே கோயில் கருவறையில் சுவாமி சிலை இருக்கும் இடத்திற்கு‍ அனுப்பி விடும். சரி அதை எப்படி‍ வெளியில் நின்று‍ கும்பிடும் நாம் பெறுவது?  அதை எப்படி‍ வீட்டுக்கு‍ எடுத்துச் செல்வது(?) இங்குதான் வருகிறார் திருவாளர் எலுமிச்சை.  ஆமாம் இந்தப் பழத்திற்கு‍ ஓசோனை பிடித்து‍ வைத்துக் கொள்ளும் பழக்கம் உண்டாம்.  எனவேதான் கோயி்லில் இநத் பழத்தை நமக்கு‍ தருகிறார்களாம். 

தினமும் எலுமிச்சை சாறு‍ அருந்துவது‍ சாலச் சிறந்தது.  குறைந்தபட்சம் ஊறுகாயாவது.

3) குழந்தைகளுக்கு‍ கடுக்காய், ஜாதிக்காய், மாசிக்காய், சுக்கு‍, மிளகு, திப்பிலி  (இன்னும் இரண்டு‍ நினைவுக்கு‍ வரவி்ல்லை)  சேர்த்து‍ இடித்...... ப்ச்....ப்ச் ..... ஏன் அவ்வளவு வேலை, நாட்டு‍ மருந்து‍ கடையில் விற்கும் திரிபலாசூர்ணம்  மற்றும் திரிகடுகுசூர்ணம் இரண்டையும் சமஅளவில் கலந்து‍ தேனில் குழைத்து‍ குழந்தைகளுக்கு‍ கொடுத்தால் உடல் ஆரோக்கியம்   மேம்படும்.

சுவாமிகள் மலையடிவாரத்தில் ஒரு‍ ஆசிரமம் அமைத்து‍ அனாதை குழந்தைகளுக்கும், ஆதரவற்ற முதியோர்களுக்கும் வாழ்வளித்து‍ வருகிறார். வராஹி விஜயம் என்ற புத்தகம் மாதாமாதம் அவரின் டிரஸ்டிலிருந்து‍    வெளிவருகிறது.   அவர் கூறிய ஒரு‍ சில விஷயங்கள் உங்களுக்காக.

நமக்கெல்லாம் சுடுகாடு‍ தென்திசையில்.  ஆடு, மாடு‍. மீன்களுக்கு‍ நம் வயிறே சுடுகாடு.

குக்கரிலிருந்து‍ வெந்த சோறை உடனே ஒரு‍ பாத்திரத்தில் சூடாக கொட்டி‍ வைத்து‍ விட்டால் கேஸ் தொந்தரவு நமக்கு‍ வராது.

ஞாயிறன்று‍ கண்டிப்பாக அசைவம் கூடாது‍ (!)

இரவில் தயிர் வேண்டாம்.

முள்ளங்கியை மிளகு, உப்பு தூவி, வடநாட்டவர் உண்பது‍ போல அப்படியே சாப்பிடலாம். வெள்ளரிக்காய் போல.

தயிர் + வாழைப்பழம், மோர் + வாழைப்பழம் கூட்டணி ஆகவே ஆகாது.

வட்டச்சூர்ணக்கீரை, துவரம் பருப்பு சம அளவு அரைத்து‍ தலையில் பற்று‍ போட்டால் எப்படிப்பட்ட தலைவலியும் குணமாகும்.

நேந்திரங்காயை வெட்டி‍ (பழம் அல்ல) வெயிலி்ல் காய வைத்து‍, பொடித்து‍, சலித்து‍ அதை தண்ணீர் அல்லது‍ பாலில் கலந்து‍ குழந்தைகளுக்கு‍ கொடுத்தால் எவ்வித டப்பா பவுடரும் தேவையில்லை.

வாழைப்பழத்தைப் பிழிந்து‍ சாறு‍ எடுக்க முடியுமா?  பிழிந்தால் ஸாரி பிசைந்தால் பஞ்சாமிர்தம்தான் கிடைக்கும்.  சாறு‍ எடுப்பது‍ எப்படி?   அருகம் புல்லின் பக்கவாட்டு‍ இலைகளை நீக்கி விட்டு, நடு‍ தண்டுப்பகுதியை துண்டுகளாக்கி பழத்துடன் சேர்‌த்து‍   வெயிலில் சிறிது‍ நேரம் வைத்தால் பழத்திலுள்ள நீர் பிரிந்து‍ வந்து‍ வி்டும். அச்சாறு‍ கண்புரை  நோய்க்கு‍ ஏற்ற மருந்து‍.

விரதமிருப்பவர்கள் தவிர மற்றவர்கள் அமாவாசை, ஏகாதசி, துவாதசி ஆகிய நாட்களில் அகத்திகீரையை கண்டிப்பாக தொடக்கூடாது.

செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் பூமிக்கடியில் விளையும் எதையும் மூச்.............

நிகழ்ச்சியின் இறுதியில் அவலும், பேரிச்சையும் கொடுத்து‍ அழகாக முடித்து‍ வைத்தார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.   சின்ன செலவுதான்.  ஆனால் பலனோ அபரிமிதம்.  நன்றி திரு.கண்ணன் மற்றும் மாணிக்கம் ஐயா.

Thursday, March 17, 2011

மண்டையை பிய்த்துக் கொள்ள

இந்த லிங்கில் சென்று‍ மேஜிக்கை பார்த்து‍ எப்படி‍ எப்படியென்று‍ மண்டையைப் பிய்த்துக் கொள்ளவும்.
http://www.youtube.com/watch?v=Lsmdnr8a3Oc

வாஷிங்டன் vs மாயவரம்

நீராராடியாவின் டேப்புகளுக்குப் பிறகு‍ மத்திய மந்திரிகளை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் முழுக்க முழுக்க பிரதமரின் சுய விருப்பம் அல்லது‍ சுய உரிமை என நினைத்திருந்தவர்களுக்கு‍ பெருத்த ஏமாற்றம்தான் விளைந்தது.  கூட்டணி தர்மத்திற்காக பிரதமரின் விருப்பத்திற்கு‍ மாறாக ஒரு‍ சிலர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்பது‍ சகஜமான ஒன்றாகி விட்ட காலமிது.  அதே போல கூட்டணி அமைச்சர்களை பதவியிலிருந்து‍ நீக்குவது‍ என்பதும் பிரதமரின் அதிகாரத்திற்கு‍ அப்பாற்பட்ட ஒன்றான விஷயமாகவும் மாறி, அவ்வாறு‍ நீக்க கூடாது‍ என்பதை ஒரு‍ மரபாகவே மாற்றியும் விட்டார்கள்.

ஆனால் சொந்தக் கட்சியை சேர்ந்த அமைச்சர்களை சில நேரம் பிரதமர் வெளியேற்றும் போதோ அல்லது‍ இலாகா மாற்றத்தை ஏற்படுத்தும் போதோ பெரிய சலனம் இருப்பதில்லை. 

ஆனால் சில ஆண்டுகளுக்கு‍ முன் தன் கட்சியை சேர்ந்த ஒரு‍ மத்திய அமைச்சரின் (தமிழகத்தைச் சேர்ந்தவர்) இலாகாவை திடீரென்று‍ பிரதமர் பிடுங்கி வேறு‍ ஒருவருக்கு‍ கொடு்த்த போது‍ தமிழகத்தில் சிறு‍ சலசலப்பு ஏற்பட்டது.  கூட்டணிக் கட்சிகளே ஆச்சர்யத்துடன் புருவம் உயர்த்தின.  இதற்கும் அவர் தன் துறையில் வெகு‍ திறமையாக பணியாற்றிக் கொண்டுதான் இருந்தார்.  மிக முக்கியமான ஒரு‍ ப்ராஜக்ட் அவர் பணியாற்றிய காலம் வரையில் பிரபலமாக ஊடகத்தில் வலம் வந்து‍ கொண்டிருந்தது.  அவருக்குப் பிறகு‍ அந்த பிராஜக்‌ட் பற்றிய எந்த செய்தியும் வந்ததாக தெரியவில்லை.

பீடிகை போதும் என நினைக்கிறேன்.  சம்பந்தப்பட்ட அமைச்சர் மயிலாடுதுறை   உறுப்பினர்   மணிசங்கர் ஐயர்.     பரபரப்பான    அந்த ப்ராஜக்ட், ஈரானிலிருந்து‍ குழாய்   மூலம் பெட்ரோலியத்தை ஆப்கன் மற்றும் பாக். வழியாக இந்தியாவி்ற்கு‍ கொண்டு‍ வருவது.  ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் பதவி இறக்கம் செய்யப்பட்டார்.  

தரம்சிங் கர்நாடக முதலமைச்சராக இருந்த பொழுது‍ கர்நாடக சட்டசபையில் ஒரு‍ முறை, கர்நாடகத்திற்கு‍ வர இருந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தை ஐயர் தமிழ்நாட்டிற்கு‍ கொண்டு‍ செல்ல இருந்ததாகவும், பிரதமர் தலையிட்டு‍ கர்நாடகத்திற்கு‍  அந்த  நிலைய்தை கொண்டு‍ வந்ததாகவும் குறிப்பிட்டார்.  இந்த ஊடலில் (?) ஐயரின் பதவி காலி ஆயிற்று‍ எனவும் ஹேஸ்யம் கூறினார்.

அன்றைய செய்திதாள்களில் சின்ன பத்தி செய்தியாக ஒரு‍ மூலையில் இச்செய்தியை படித்த ஞாபகம். ஆனால் இப்போது‍ விக்கி லீக்ஸ் வெளியிட்ட    குறிப்புகளில்  அமெரிக்காவுக்கு‍ ஆதரவாக செயல்படக்கூடிய அமைச்சருக்கு‍ பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஐயரை தூக்கினார்கள் எனறு‍ செய்தி வெளியிட்டிருக்கிறது.

கண்ணுக்குத்‍ தெரியாத பல ஆக்டோபஸ் அதிகார கரங்கள் எப்படியெல்லாம் இந்திய ஜனநாயகத்தில் அலைந்து‍ கொண்டிருக்கின்றன என்பதற்கு‍ இந்த நிகழ்வை உதாரணமாக கொள்ளலாம்தானே.




தேர்தல் கணக்கு‍

மல்லிகை மாலைக்கு‍ 400 ரூபாய், வெடி‍ வெடித்தால் 100, பிரியாணிக்கு‍ ஆகும் செலவு என எல்லாவற்றையும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப் போவதாக ஒரு‍ நீண்ட பட்டியலை தேர்தல் கமிஷன் அறிவித்திருப்பதை படித்திருப்பீர்கள். 

கூடவே இதையும் சேர்த்திருக்கலாம்.  கேட்ட தொகுதி தங்கள் கட்சிக்கு‍  கிடைக்காதது, எதிர்பாராத நபருக்கு‍ கட்சி மேலிடம் டிக்கெட் கொடுப்பது‍, போன்ற நிகழ்வுகளின் போது‍  கட்சித்  தொண்டர்கள் டென்ஷனாகி, உணர்ச்சி வயப்பட்டு‍ சம்பந்தப்பட்டவர்களின் உருவ பொம்மையை எரி்த்தால் அதற்கும் ஒரு‍ தொகையை நிர்ணயம் செய்து‍ அதை வேட்பாளர் கணக்கில் சேர்த்து‍ விடலாம்.

அநாகரிகமான இந்த செயலை தடுத்த புண்ணியம் கமிஷனுக்கு‍ கிடைத்தது‍ போலவும் இருக்கும்.  சுற்றுச்சூ‍‍ழலை காத்தது‍ போலவும் இருக்கும்.

Tuesday, March 15, 2011

அஞ்சறைப் பெட்டி‍

நண்பரின் வீட்டிற்கு‍ சென்றிருந்தேன்.  பையனை பாராட்டிக் கொண்டிருந்தார். பாராட்டுதலில்  ஒரு‍ அன்னியத்தன்மை தெரிய, என்ன விஷயம் என வினவினேன்.  பையன் இடைநிலைத் தேர்வில் இரண்டாவது‍ ரேங்க் என்றார்.  அப்படியா என்று‍ நானும் மகிழ்ச்சியுடன் பையனின் முதுகில் தட்டிகொடுத்துவிட்டு‍ அரையாண்டில் எவ்வளவு என்றேன்.  செகண்ட் ரேங்க் என்றான்.  காலாண்டில்?  செகண்ட்தான் இப்போது‍ அப்பா பேசினார்.

எனக்கு‍ சற்றே குழப்பம்.  ஆரம்பத்தில் இருந்தே இரண்டாவது‍ ரேங்க் என்றால் இந்த  கொஞ்சல், கொஞ்சம் ஓவராக தெரிய வாய்விட்டு‍  கேட்டே  விட்டேன்.   ஒன்றும் பேசாமல் ரேங்க் கார்டை நீட்டினார்.  வாங்கிப் பார்த்ததும் எனக்கு‍ சிரிப்பு வந்தது.  காலாண்டில் மொத்த மதிப்பெண்கள் 492.  2வது‍ ரேங்க்.  அடுத்த தேர்வில் 496 2வது‍ ரேங்க்.  பிறகு‍ 497 அப்போதும் செகண்ட்.  இப்போது‍ 498,  ஆமாம் செகண்ட் ரேங்க்.

யாருப்பா அந்த பொண்ணு? (லேடீஸ் ஃபர்ஸ்ட் அல்லவா) எனக் கேட்டேன்.  பெயரைச் சொன்னான்.  ஒரு‍ நடிகையின் பெயர்.

சரி பையன் எத்தனாவது‍ படிக்கிறான்? என்றா கேட்டீர்கள்.  ஹ...........ஹி.............ஒன்னாப்புதான்.

நோ......   நோ..... பல்ல நற நறன்ன கடிச்சா எனக்குப் பிடிக்காது.

****************

தேர்தல் அறிக்கை எதுவும் இன்னும் வரவி்ல்லை.  இப்பதிவில் வரும் விஷயத்தை ஏதாவது‍ ஒரு‍ கழகம் தன் தேர்தல் வாக்குறுதியாக அளித்தால்  என்னைப் போன்ற தமிழுணர்வாளர்களுக்கு‍ (?) அது‍ இன்பத் தேனாகவும் இருக்கும்; அக்கட்சிக்கு‍ ஒரு‍ ஓட்டு கிடைத்தது‍ போலவும் இருக்கும்.
சென்ற ஆட்சியில் தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு‍ வரி விதிப்பு கிடையாது‍ என அறிவித்தார்கள்.  கிட்டத்தட்ட எல்லாப்  படங்களும் இந்த சலுகையை பயன்படுத்திக்   கொண்டன என்றுதான்  சொல்ல வேண்டும். ( சிவாஜி போன்ற படங்கள்‍ பெயர்ச் சொல்லை காரணம் காட்டி‍ வரி விலக்கு‍ பெற்றது‍ வேறு‍ கதை)

இதே போல முழு‍க்க முழுக்க தமிழில் பெயர்ப் பலகையைக் கொண்ட கடைகளுக்கும், நிறுவனங்களுக்கும்  வரியில்  ஏதாவது‍ ஒரு‍ சகாயம் செய்தால் தமிழினி பெயர்ப்பலகைகளிலும் மின்னும். 

சங்கப்பலகையிலிருந்து‍ பெயர்ப்பலகைக்கு‍ தமிழை கொண்டு‍ சென்ற தலைவரே/வியே  என வாழ்த்த தொண்டர்களுக்கு‍ ஒரு‍ வாய்ப்பு கொடுத்தது‍ போலவும் இருக்கும்.

நிற்க.  மற்ற மாநிலங்களில் மைல் கற்களில் தூரத்தை குறிக்கும் எண் அளவுகள் கூட அந்தந்த மொழிகளிலேயே இருப்பதை கவனித்திருப்பீர்கள்.  அதே போல நாமும் நமது‍ டூவீலரில், ரெஜிஸ்டர் எண் எழுதும் போது‍ முழுமையாக இல்லாவிட்டாலும் குறைநத் பட்சம்  TN என்பதற்கு‍ பதிலாக "தநா" என போடலாம் என எண்ணியிருந்தேன்.  ஆனால் கடைககாரரோ  அந்த மாதிரி போடக்கூடாது‍  சார்.  ஸ்ட்ரிக்ட்டா சொல்லியிருக்காங்க என்று‍ சொல்லிவிட்டு‍  என் பதிலை எதிர்பாராமல் கண்ட்ரோல் P யை தட்டி‍ விட்டான்.

சரி இது‍ நிர்வாக வசதி என்று‍ வைத்துக் கொணடால்,  பெயர்ப்பலகையில்  தமிழுக்கு‍ என்ன கேடு் வந்தது.

இப்படி‍ பெயர் வைத்தால் தமிழ் வளர்ந்து‍, காய்த்து‍ தொங்குமா?  என்ற மொக்கை கேள்வியை யாரேனும் கேட்டால், ஸாரி, ஆடுகளத்தி்ல் பார்வையாளருக்கு‍ இடமில்லை என்பதே என் பதில்.

ஆங்கிலத்தை அப்படியே (டிம்பர் டிப்போ) தமிழில் எழுதுவது.  தொல்காப்பியர் ஜெராக்ஸ் என்று‍ எழுதுவது‍  அல்லது‍ எவர்பிரைட் அடுமனையகம் என தமிழுக்கு‍ போனால் போகட்டும் என்று‍  செகண்ட் ஹேண்‌ட் அரியாசனத்தை  போடுவது  எந்த வகையில் உத்தமம் என்று‍ யோசிக்க வேண்டும்.   குழந்தைகளுக்கு‍ பெயர் வைப்பது‍ போல நிறுவனங்களுக்கு‍ பெயர் வைப்பது‍ என்பது‍ ஒரு‍ குதூகலமான நிகழ்வு என்பது‍ என் கருத்து. 

ஒரு‍ சில நிறுவனங்கள் பெயர்ப் பலகையில் அடி‍ தூள் பரத்தி விட்டு‍, உள்ளே  சகட்டு‍ மேனிக்கு‍ ஆங்கிலம் சடுகுடு‍ விளையாட‍  அனுமதி  கொடுத்திருப்பாரக்ள்.   

Bus Stand என்பதற்கு‍ பேருந்து‍ நிலையம் எனவும், காவல் நிலையமாக Police Station பெயர் பெற்ற போது‍ம்  கிண்டல் பண்ணியவர்கள்  இன்று‍ கம்பிகும்பா தண்டனையை சொர்கத்திலேயே பெற்று‍க் கொண்டிருக்கிறரார்கள் என கேள்விப்பட்டேன்.

தமிழ்க்குடிமகன் புண்ணியத்தில் சில காலம் இவ்வேலைகள் ஜரூராக நடந்தன.  பிறகு‍ ஒரு‍ சுணக்கம்.  கவனிக்க வேண்டிய ஒரு‍ சில மென்மையான  பிரச்சனைகளில்   இதுவும் ஒன்று‍.

எனக்கு‍ பிடித்த ஒரு‍ கடையின் பெயர் :  பாதமலர் காலணியகம்.


கோவை நூறுஅடி‍ சாலையில் உள்ளது. பேருந்தில் சென்ற போது‍ பார்த்ததோடு‍   சரி.   எனக்கும்  கடைக்கும்  தொடர்பு  இல்லை. 

கிடக்கிறது‍ கிடக்கட்டு்ம், கிழவனை தூக்கி ...................................  என யாராவது‍ பின்னூட்டம் போட்டால், நீங்கதான் ஒரிஜினல் தமிழர் என ஒப்புக்  கொள்வேன்.




தேர்தல் கமிஷன்

கூட்டணி உண்டா இல்லையா? பிரிந்தால் ஸ்பெக்ட்ரம் என்னவாகும்?  அங்கே சென்று‍ விடுவார்களா?  ஏற்கனவே இருப்பவர்களுக்கு‍ பிரித்தது‍ போக இவர்களுக்கு‍ எவ்வளவு கொடுப்பார்கள்? கிடைப்பதை பெற்றுக் கொண்டு‍ இவர்களும் திருப்தியடைவார்களா?  நடிகர் கட்சிக்கு‍ எவ்வளவு?  அவரும் இங்கேயா?  அல்லது‍ அங்கேயா?  என்று‍ தமிழக மக்கள் ஒரு‍ பக்கம்,  மண்டையை உடைத்து‍ கொண்டிருக்க, மற்றொரு‍ புறம் புலனாய்வு பத்திரிகைகள் தன் பங்கிற்கு‍ வாரம் இரு‍ பட்டாசுகளை கொளுத்தி போட, இணையமும் தன் பங்கிற்கு‍ தனி ஆவர்தனத்தில் இறங்கி ஹேஸ்யம் கூற ஒரே பரபரப்பு எங்கும் பரயிவிருந்தாலும் மே மாதம் தேர்தல்; ஏப்ரலின் மத்தியில் அது‍ சூடு‍ பிடிக்கும் என அசமந்தமாக (அரசியல் கட்சிகள் உட்பட) எல்லோரும் இருந்த வேளையில், ஐந்து‍ மாநில தேர்தல் துவங்கும் முதல் நாளே தமிழகத்தி்ற்கு‍ ஒரே கட்ட தேர்தலை ஆணையம் அறிவித்து‍ நாங்கள் யாருக்கும் சளைத்தவர்களில்லை என்று‍ தன்னை நிரூபித்திருப்பது‍ கூட ஒரு‍ அதிரடி‍ அரசியல்தான்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் எல்லா கட்சியும் தேதியை மாற்றக்கோரி ஒற்றுமையுடன் (!) கோரிக்கை வைக்கும் என்று‍ முன் கூட்டியே தேர்தல் ஆணையம் நிச்சயம் யோசிக்கமாலிருந்திருக்காது. அட்டானமஸ் என்பதால் எடுத்த முடிவில் நிலையாக இருந்தது‍ கூட வியப்பில்லைதான்.

ஆனால் எல்லா கட்சிகளும் வெகுவிரைவில் கூட்டணியை தீர்மானிக்கவும், போட்டியிடுவதற்கான இடங்களை முடிவு செய்து‍ உடனே மனுதாக்கல் செய்வதற்கான காலத்தை குறுக்கி வைத்து‍ அவர்களை அதீதமான அரசியல் தந்திரங்கள் செய்ய விடாமல் தடுத்தது‍ சூப்பர்ப்.

மே முதல் வாரத்தில் தேர்தல் என்று‍ எல்லோரும் நினைத்த மாதிரி அறிவித்திருந்தால் பணப்பட்டுவாடாவுக்கு‍ முன் கூட்டியே அழகாக ரூட் போட்டு‍ கொடுத்தது‍ மாதிரி ஆகிவிடும்.  தேதியை அறிவித்த உடனேயே வருவாய் துறையினரை தேர்தல் பணியில் ஈடுபடுத்தி அதிகமான தொகை எடுத்துசெல்லும் வாகனங்களை சோதனைக்கு‍ உட்படுத்தி கிலியை ஏற்படுத்‌துவது‍ நமக்கு‍ ரொம்ப புதுசு.  (ஆமாம் இந்த வாகனச் சோதனை திருமங்கலத்தை தன்னகத்தே கொண்ட தமிழகத்திற்கு‍ மட்டும்தானா?  அல்லது‍ மற்ற நான்கு‍ மாநிலத்திற்கும் உண்டா?) 

இதுவரை 20கோடி ரூபாய் தொகை சரியான ஆவணங்கள் இல்லாமல்,  சிக்கியிருப்பதைப் படித்த எனது‍ நண்பர் சொன்னார். தேர்தலுக்கு‍ முந்தைய நாள் தேர்தலை ஒத்தி வைத்து‍ விட்டு‍, மாநில நிர்வாகத்தை தேர்தல் ஆணையமே சில மாதங்களுக்கு‍ மேற்கொண்டால் நன்றாக இருக்கும் போல் தெரிகிறதே. எவ்வளவோ பார்த்துட்டோம், இதையும் பார்க்கமாட்டமா?   என்று‍    சிம்புவை    வேறு‍      துணைக்கழைத்தார்

அரசியல்வாதிகளுடன் பழகிப்பழகி, ஏன் அரசியல்வாதிகளையே தேர்ந்தெடுத்து‍ சான்றிதழ் கொடுத்து‍ சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம்‌ அனுப்பும் தேர்தல் ஆணையம், தானும் சரிக்கு‍ சரியாக அவர்களுடன் களத்தில் இறங்கி மல்லு கட்ட தயாராகிவிட்டது.  தமிழக தேர்தல் வரலாற்றில் இந்த தேர்தல் ஒரு‍ மைல்கல்தான்




Thursday, March 10, 2011

முதல் பதிப்பு

அச்சு‍ இயந்திரம் தமிழகத்துக்கு‍ வந்திறங்கிய நேரம்.  தமிழில் பைபிளை முதன்முதலி்ல் அச்சேற்றியாகிவிட்டது.   இப்போது‍ இலக்கியம் பக்கம் தன் கவனத்தை திருப்பிய ஆங்கிலேய அரசாங்கம், முதன்முதலில் எந்த நூலை அச்சேற்றலாம் என தன் ஊழியர்களை கேட்க, சிவக்கொழுந்து‍ தேசிகரை நோக்கி எல்‌லோரும் கைநீட்ட அவரை வரவழைத்தார் துரை.

கும்பகோணம் அருகேயுள்ள ஒரு‍ குக்கிராமம் கொட்டையூர்.  ஆதீனத்தில் புலவராக இருந்தவர் சிவக்கொழுந்து‍ தேசிகர்.  வெள்ளைக்கார துரையிடம் சென்ற தேசிகர், சற்றும் தாமதியாமல், துரை கேட்ட கேள்விக்கு‍ "திருக்குறள்" என பதிலளித்தார். 

"திருக்குறளில் அப்படி‍ என்ன இருக்கிறது"‍ - இது‍ துரை
"என்ன இல்லை"- இது‍ தேசிகர்
"எல்லாம் இருக்கிறதா?‍"
"அனைத்தும் இருக்கிறது?"
சுற்றும் முற்றும் பார்த்த வெள்ளையன், "அதோ அந்த கல்லைப் பற்றி இருக்கிறதா." என கேட்க, 
"கல்லைப் பற்றி இருமுறை வருகிறது‍" என பதிலளித்தவர் உடனே, 
"பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளை கல்"  என்ற குறளை கூறி துரையை அசத்தினாராம்.
குறள் புத்தக வடி‍வில் அமோகமாக அச்சேறியதாம்.
இப்படி‍ ஒரு‍ சம்பவத்தை எங்கேயோ படித்த நினைவு.  அதை என் முதல் பதிப்பாகவும் வெளியிட உதவிய தேசிகருக்கு‍ நன்றி.
தேசிகரைப் பற்றிய மற்ற விஷயங்களை யாரேனும் தெரியப்படுத்தினால் அவருக்கு‍ தன்யனாவேன்.

ஹலோ...... என்னது‍ ............... புரியல  ........ஆங்  ..... அந்த இன்னொரு‍ குறளா,
அஸ்கு, புஸ்கு‍ நீங்களே வள்ளுவர்கிட்ட கேட்டு‍ தெரிஞ்சுக்குங்க.