நாட்டின் பல பாகங்களில் இன்னும் உலகக் கோப்பையை நம் அணி வென்றதை வெறித்தனமாக வெடி வெடித்து, கொட்டு முரசு கெட்டி கொண்டாடி கொண்டிருக்கும் (எத்தனை ஒத்தக் கொம்பு பாருங்கோ) இவ்வேளையில், தமிழகமோ ஏற்கனவே தேர்தல் களேபரத்தில் அதிரிபுதிரியாக இருப்பதால், வெகு சீ்க்கிரமே கிரிக்கெட்டிலிருந்து வெளியே வந்து விட்டது.
ஒரு பக்கம், தேர்தல் அலுவலர்கள் கைப்பற்றும் பணத்திற்கு கணக்கு காட்டி, திரும்ப பெற்றுக் கொள்ள ஆட்கள் வராமல் அனாமத்தாக அது கணக்காயர் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் வடிவேலு குடியை மட்டும் மையமாக வைத்துக் கொண்டு விஜயகாந்தை விளாசுகிறார். மறுபுறம் சிங்கமுத்துவின் எதிர்ப்பாட்டு. தான் செல்லும் இடங்களிலெல்லாம் ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பும் வண்ணம் விஜயகாந்த் பரப்புரை செய்வது (சன், கலைஞர் டிவிக்களின்படி) என்ன மாதிரியான எண்ணங்களை மக்கள் மனதில் ஏற்படுத்தும் என்பது மே13ல் தெரியும்.
பூத் ஸ்லிப் கொடுப்பதை கூட தானே செய்வதாக அறிவித்திருந்த ஆணையம் தற்போது கட்சிக்காரர்களும் கொடுக்கலாம் என கூறுகிறுது. ஏன் இந்த திடீர் மாற்றம் என தெரியவில்லை.
அஸ்ஸாமின் முதற்கட்ட வாக்குப்பதிவில் 70% வாக்குபதிவாம். தமிழகத்தில் 80% பேர் படிப்பறிவு பெற்றவர்கள் என போன வாரம் வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது. அதன் படி பார்த்தால் குறைந்த பட்சமாகவே 75% ஓட்டுப் பதிவு வர வேண்டும். எத்தனை பேர் உலககோப்பையை தொ.காவில் பார்ப்து மட்டுமே தேசப்பற்றின் உச்சம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அடுத்த புதனில் தெரிந்து விடும்.
வலம்புரி சங்கோ அல்லது ஏதோவொன்றையோ (கடற்கரையில் கிடைப்பதுதான்) காதில் வைத்துக் கேட்டால் கடல் இரைச்சல் அதில் கேட்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். அதே போல அனாமத்தாக ஆங்காங்கே பிடிபடும் பணக்கட்டுகளை காதில் வைத்து கேட்டால் "டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா .........." பாடல் கேட்கிறதாமே.
(டீக்கடையில் யாரோ இருவர் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டது சார்)
************************
இதோ இந்த வாரத்தோடு என் அருமைப்புத்திரனுக்கு பரீட்சை முடிகிறது. அடுத்து வரக்கூடிய ஒன்றரை மாதங்களும் அடடடடா............... நினைக்கவே பயமாயிருக்கிறது. எங்கள் தெருவில் இறங்கும் ஒட்டுமொத்த வெயிலும் இவனை ஒத்த பையன்கள் மீதுதான் விழும். மருத்துவச் செலவு, தின்பண்ட செலவு என இப்போதே கொஞ்சம் எடுத்து வைக்க வேண்டும். என்ன அவனுக்கு தாத்தா, பாட்டி கண்காணிப்பது இருப்பதால், நமக்கு கொஞ்சம் டென்ஷன் குறைவுதான்.
***********************
நேற்று சனி கிரகத்தை தேடித் தேடி பார்த்ததில் என் கண்களுக்கு சிக்க மாட்டாமல் எங்கேயோ ஒளிந்து கொண்டார். (நல்லவேளை கனவில் வந்து - ஒத்த சாதிக்கார பயல்களுக்கு தரிசனம் காட்டுவதில்லை என்று சொல்லவில்லை) வானில் இது போல, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏதேனும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் உள்ள திரில்லே இது போல மீண்டும் நிகழ்வதை நாம் பார்ப்பதற்கு பல்லாண்டு பல்லலாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ வேண்டும். அவ்வளவுதர்ன்.
இந்த வானியல் நிகழ்ச்சிக்கு ஒத்த ஒரு காலகட்டத்தை நீண்ட காலத்திற்கு பிறகு நமது மாநிலம் தற்போது சந்திக்க போகிறது. ஆம் தேர்தல் முடிந்த மறுநாளிலிருந்து மே13ல் ரிசல்ட் வந்து, அடுத்த அரசு பதவி பிரமாணம் எடு்க்கும் வரையிலான இந்த ஒரு மாதம் அரசு இயந்திரம் எப்படி சுழலும்(!) யார் சுழற்றுவார்கள். ஜனாதிபதி ஆட்சிக்கு நிகரான இக்காலகட்டத்தில் பத்திரிகைகளுக்கு மாநில அளவில் என்ன செய்தி கிடைக்கும். கள்ளக்காதலி சதக் சதக் கொலை, பிக்பாக்கெட்காரனுக்கு தர்ம அடி, வேப்பமரத்தில் அம்மன் உருவில் பால் வடிகிறது போன்றவைகளுக்கு எட்டு கால அளவில் இடம் கிடைக்கலாம். கருத்து கணிப்புகளுக்கு தடை. இலவச அறிவிப்புகளுக்கு வாய்ப்பு இல்லை. அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு இல்லை. அந்த தொண்டர்கள் இங்கே வந்தார்கள். இவர்கள் அங்கே சென்றார்கள். பாதிபேர் நடுவில் மாட்டிக் கொண்டார்கள் போன்றவையும் நடக்க வாய்ப்பி்ல்லை. எதிர்கட்சியும் கிடையாது. ஆளுங்கட்சியும் கிடையாது. கூட்டணி பற்றி தெரியவில்லை. என்ன ஒன்று, ஐ.பி.எல்லை எவ்வித தொந்தரவும் இன்றி ரசிக்கலாம்.
*********************
திமுகவிற்கு ஆதரவு கேட்கும் விளம்பரப் பாடல்கள் கலைஞரில் ஒளிபரப்பாகின்றன. அடுத்து புதிதாக துவங்கும் ஏதோவொரு சீரியலுக்கான முன்னறிவிப்பு பாடல் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். அப்புறம்தான் இது தேர்தல் பரப்புரை பாடல் என்று தெரிந்தது. ஒவ்வொரு பாடலையும் வெரைட்டியாக எடுத்திருக்கிறார்கள். ஒளிபதிவு, இயக்கம், இசை, நடிப்பு, நடிக-நடிகையரை தேர்வு செய்தது என ஒவ்வொன்றிலும் மிகுந்த கவனத்தை செலுத்தியிருக்கிறார்கள்.
முன்னெல்லாம் தேர்தல் என்றால் ஏதாவது ஒரு பல்லு போன கிழவியோ அல்லது குடு குடு கிழவனாரோ போஸ்டரில் அரசியல் கட்சித் தலைமையின் அரவணைப்பி்ல் சிரித்து கொண்டிருப்பார்கள். (மிரண்டு போய்தான்) ஆனால் இந்த பாடல்களில் வருபவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள்தான். காலம் மாறிவருவதை தேர்தல் பிரச்சாரமும் உணர்த்துகிறது.