பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானி மற்றும் இந்தியப் பிரதமர் இருவருமாக சேர்ந்து நேற்று கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியை மொகாலி மைதானத்தில் அருகருகே அமர்ந்து ரசித்து பார்த்தது ஒரு செய்திதான். ஆனால் அவர்கள் அமைதியாக ரசித்து பார்க்க தகுந்த பாதுகாப்பு சூழ்நிலையை உருவாக்க, பின்னணியில் இருந்து உழைத்த காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரை எண்ணிப் பார்க்கும் போதுதான் ஒரு சின்ன சந்தேகம் வருகிறது.
கடந்த உலககோப்பையில் இந்தியா தோல்வியடைந்தபின், கபில்தேவ் ஐ.சி.எல் என்ற அமைப்பை உருவாக்கி கிரிகெட் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார். வரும்படி வராமல் போகும் என்ற பயத்தில் அதற்கு போட்டியாக பி.சி.சி.ஐ.யும் ஐ.பி.எல் என்ற அமைப்பை உருவாக்கி கல்லாவை திறம்பட கட்டி வருகிறது அப்போது ஏற்பட்ட சலசலப்பில் ஒரு விஷயம் மக்களுக்கு தெளிவானது. பி.சி.சி.ஐ என்பது அரசாங்க அமைப்பல்ல. தனியார் அமைப்புதான். இன்னும் சொல்லப்போனால் கிரிக்கெட்டை நடத்தும் ஒரு சங்கம் மட்டுமே. ஆனால் கைப்புள்ள சங்கத்துடன் ஒப்பிட முடியாதபடிக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை சொத்தாக கொண்ட ஒரு அமைப்பு. எந்த இடத்தி்லும் இந்திய அரசுக்கு கட்டுப்படவேண்டிய அவசியமில்லாத ஒன்று.
சரி என்னுடைய சந்தேகத்துக்கு வருகிறேன். எங்கு மேட்ச் நடந்தாலும் சரி, நுழைவுச்சீட்டு வாங்கும்போது ரசிகர்களை அடித்து உதைத்து வரிசையில் ஒழுங்குபடுத்துவதிலிருந்து, வந்த வெளிநாட்டு, உள்நாட்டு வீரர்கள் ஆட்டம் முடிந்து பாதுகாப்பாக ஊர் போய் சேருவதிலிருந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பெறும் பொறுப்பு காவலர்களுக்கு உண்டு. சில நேரங்களில் இராணுவத்தையும் ஈடுபடுத்தி பாதுகாப்பை பலபடுத்துகிறார்கள்.
ஒரு தனியார் அமைப்பு நடத்தும் விளையாட்டு போட்டிக்கு அரசு அமைப்பான காவல்துறையையும், இராணுவத்தையும் பாதுகாப்பிற்காக துணைக்கு அழைக்கும் போது கட்டணமாக ஏதாவது ஒரு தொகையை அரசுக்கு அவர்கள் செலுத்துகிறார்களா? விளையாட்டு போட்டிக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறைக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என்று ஏதேனும் சலுகையை அரசிடம் பெற்றிருக்கிறார்களா? இல்லை இவ்வாறு இண்டர்நேஷனல் மேட்ச் நடக்கும் போது விஷயத்தை மட்டும் காவல்துறையிடம் தெரிவித்தாலே, இலவசமாக(!) பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அவர்களது கடமையா?
ஒருகேட்சுக்கு பத்தாயிரம், Fourஅடித்தால் ஒரு தொகை, சிக்ஸ் என்றால் ஒரு தொகை, நூறு, ஐம்பது என அடித்தால் கணிசமான தொகையை வீரர்களுக்கு அள்ளி வழங்கும் சங்கம் டிக்கெட் விற்பனையிலும், விளம்பர வருவாயிலும், டிவிக்களுக்கு ஒளிபரப்பு உரிமையை கொடுப்பதிலும் சங்கம் ஒரு கணிசமான தொகையை பார்த்து விடுகிறது. எனவே பாதுகாப்பிற்கென கட்டணம் செலுத்துவதில் எந்த நிதிச் சிக்கலும் (!) அவர்களை அண்ட வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.
எல்லோருடைய நாட்டுப்பற்றையும் (பிரதமர், முதலமைச்சர்கள் உள்பட) காசாக்க தெரிந்த இந்த அமைப்பிற்கென்று என்னவிதமான சமூக நலச் சிந்தனை இருக்கிறது என்பதும் மேற்படி சந்தேகத்தின் கிளை சந்தேகம்தான்.
பி.கு: நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் பரவலாக பரிட்சை நடந்து கொண்டிருந்த சமயம். இரண்டாவது ஐ.பி.எல்லை ஒரு மாதம் ஒத்தி வையுங்கள் என்று கோரிக்கையை வைத்த போது, எதற்காகவும் அட்டவணையை மாற்ற (புடலங்காய் அட்டவணை) முடியாது என்று வாதிட்டு ஆட்டத்தை தெ.ஆப்பிரிக்காவிற்கு மாற்றி அதே மாதத்தில் நடத்தி காட்டிய அஞ்சா நெஞ்சன்தான் நம்ப லலித் மோடி.
No comments:
Post a Comment